வலுக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டம்... தமிழகம் முழுவதும் மறியல் செய்த 75 ஆயிரம் பேர் கைது
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்து தமிழகம் முழுவதும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிருப்தி
இதையடுத்து அரசு அலுவலகங்களில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். சில பள்ளிகள் மூடப்பட்டதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.

ரிப்பன் பில்டிங்
போராட்டத்தின் 2-ஆவது நாளாக நேற்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் பில்டிங் அருகே மறியல் நடத்தினர்.

சாலை மறியல்
போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபோல் பெரியமேடு சாலை நோக்கி மறியல் போராட்டம் நடத்தியவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸாரையும் மீறி சிலர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

தமிழகம் முழுவதும்
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 1700 பேர் கைது செய்யப்பட்டனர். அது போல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் செய்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 75 ஆயிர்ம பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்றும் சாலை மறியல் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications