குப்பை தொட்டி பஞ்சாயத்து! திமுக பெண் பிரமுகருக்கு அடி! அதிமுக நிர்வாகி கைது..சேத்துப்பட்டில் பரபர..!
சென்னை : சென்னையில் வீட்டின் முன் குப்பைத் தொட்டி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கை கலப்பாக மாறியதில் திமுக பெண் வட்ட செயலாளரை தாக்கியதாக அதிமுக பெண் நிர்வாகி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இருக்கும் கத்தான் தெருவில் அதிமுக தெற்கு பகுதி மகளிர் அணி செயலாளரான இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் இருக்கும் முருகேசன் தெருவில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

அந்த வீட்டின் முன் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை சேகரிக்கும் தொட்டி தூய்மை பணியாளர்களால் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அந்த குப்பை தொட்டியை இளவரசி அகற்றி வேறு இடத்தில் வைத்திருக்கிறார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இது குறித்து ஹாரிங்டன் ரோடு பகுதியில் வசிக்கும் 108வது வார்டு திமுக வட்ட செயலாளரான வான்மதி இடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
இதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்ட வான்மதி இளவரசியின் செயல் குறித்து புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வேறு இடத்தில் இருந்த குப்பை தொட்டியை எடுத்து ஏற்கனவே இருந்த இடத்திலேயே வைத்துள்ளனர். கட்சி ரீதியான வன்மம் காரணமாகவே வான்மதி தன் வீட்டின் முன் குப்பை தொட்டியை வைத்ததாக நினைத்து ஆத்திரமடைந்த இளவரசி தனது நண்பராக இருக்கும் ஓபிஎஸ் குழுவின் மாவட்ட துணை செயலாளரான அவ்வைபுரம் மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வான்மதியின் கட்சி ஆபீஸுக்கு சென்றுள்ளனர்.
அப்போது குப்பை தொட்டியை ஏன் என் வீட்டின் முன் வைத்தீர்கள்? என இளவரசி வான்மதியை கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கை கலப்பான நிலையில் இளவரசியின் ஆதரவாளர்கள் வான்மதியின் அலுவலகத்தை சூறையாடியதோடு நாற்காலிகளை தூக்கி வீசி வான்மதியை தாக்கி உள்ளனர். இதில் வான்மதி மற்றும் அந்த அலுவலகத்தில் இருந்த பாலு சிவா உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து தான் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக வான்மதி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இளவரசி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான அவ்வைபுரம் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார். சென்னையில் அதிமுக திமுக பெண் நிர்வாகிகளுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications