கடும் கட்டுப்பாடுகள்.. சென்னைக்கு வெளியே தினசரி பணிக்கு செல்ல அனுதியில்லை.. போலீஸ் கமிஷனர்
சென்னை: சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பயணம் செய்ய அனுமதி இல்லை என சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பல ஆயிரங்களை தாண்டிவிட்டது. இதனால் நாளை முதல் மேற்கண்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்து விளக்க காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் இன்று மாலை வேப்பரியில் உள்ள கமிஷ்னர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் சென்னையில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பக்கத்து கடைகளில் சென்று காய்கறி, மளிகைக் கடைகளை வாங்க வேண்டும். கார், இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். 2 கி.மீ. தூரம் வரை நடந்தே சென்று காய் வாங்க வேண்டும்.
சென்னையில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். போலி இ பாஸ் பயன்படுத்தினால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். வழக்கம் போல் காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்டவை மூடப்படும். சென்னையின் உள்பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு.. எவை செயல்படும், எவை செயல்படாது?
திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கெனவே பெற்ற இ பாஸ் செல்லாது. புதிதாக விண்ணப்பித்து பெற வேண்டும். பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் தினசரி சென்னை வந்து செல்ல முடியாது.
அரசின் சிறப்பு அனுமதி பெற்று வேண்டுமானால் சென்னைக்குள் வந்து செல்லலாம் என்றார். முன்னதாக கொரோனாவால் பலியான பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.