கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள்
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கே11 போலீசார் ட்ரோன் ஆப்ரேஷன் நடத்தினார்கள். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் எப்போதும் பரபரப்பான பேருந்து நிலையமாக இருந்தது கோயம்பேடு பேருந்து நிலையம் தான். இப்போது அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டாலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து தான் சென்று வருகின்றன. இதுதவிர அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்பட ஒரு பாதி சென்னை மக்கள் கோயம்பேடு வந்து தான் பிற இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

இதுதவிர பிற மாநில பேருந்துகள், புதுச்சேரி, காஞ்சிபுரம், பெங்களூர் பேருந்துகள் கோயம்பேடு தான் வருகின்றன. அத்துடன் மெட்ரோ ரயிலும் இருப்பதால், பிஸியான பேருந்து நிலையமாகவே இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி, பழம் மற்றும் மலர் சந்தைகளில் ஒன்றான காய்கறி சந்தை கோயம்பேட்டில் தான் இருக்கிறது. இந்த சூழலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றிலும் சிலர் குடித்துவிட்டு தகராறு செய்வது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது , சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அவ்வப்போது நடக்கிறது.இதனை தடுக்க கடும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
அதன்படி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, கே11 கோயம்பேடு காவல் நிலைய போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, போலீஸார் இந்த பிரத்தியேக முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ட்ரோன் மூலம் கூட்டத்தைக் கண்காணித்த போலீஸார், அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். குற்றவாளிகளைக் கண்டறியவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் போலீஸார் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications