விஜய் மீது பாயும் நடவடிக்கை? நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீஸ்! சென்னையில் பரபரப்பு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
விஜய் வீட்டை கடந்து செல்லும் வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பல வாகனங்கள் விஜய் வீட்டை கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்திருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சீனா உட்பட இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்திருந்தது. சம்பவம் நடந்த இரவு, கரூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்து சென்னை புறப்பட விஜய் தயாரானபோது, உயிரிழப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் விஜய் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
குடியரசுத் தலைவர், முதல்வர், பிரதமர், மத்திய அமைச்சர் என அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்த பின்னர், விஜய் டிவிட்டரில் மனம் கனக்கிறது என்று பதிவிட்டிருந்தார். அரசியல் தலைவராக, தான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்கும் விதத்தில் அவரது பதிவு இல்லை. இதற்கிடையில் நள்ளிரவு புறப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் வந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். மட்டுமல்லாது, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவிற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிய மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் தவெகவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், "இந்த வழக்கில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதித்திருக்கிறது. இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் பயணம் செய்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கருணை காட்டுகிறீர்களா? வழக்குப்பதிவு செய்ய எது உங்களை தடுக்கிறது?
சம்பந்தப்பட்ட பஸ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? பேருந்தை இந்நேரம் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? பின்னர் எப்படி மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும்? இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. கரூரில் நடந்த சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும் . பொறுப்பை யாரும் தட்டி கழிக்க முடியாது. பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த நிலையில், கட்சி தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு, விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடி உள்ளனர்.
அவர்களுக்கு தலைமை பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்காதது கண்டனத்திற்குரியது. விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து இன்று விஜய் வீட்டுக்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications