மீசைக்கார போலீசின் குழந்தைச் சிரிப்பு.. உலகமே ரசித்ததே.. நெகிழ்ச்சி தருணம் பற்றி விவரித்த தயாளன்!
சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட குடும்பத்தினரின் குழந்தையுடன் போலீஸ்காரர் நடந்து செல்லும் புகைப்படம் தீயாகப் பரவிய நிலையில், அந்த தருணம் குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் தலைமை காவலர் தயாளன்.
மிக்ஜாம் புயலால் சென்னை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய சென்னை பகுதியில் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கம் விபிஜி அவென்யூ பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

அப்போது, காவலர் ஒருவர் குழந்தையை அரவணைத்தபடி, புன்சிரிப்போடு தேங்கியுள்ள மழைரில் நடந்து சென்ற புகைப்படம் இணையத்தில் பரவி, அனைவரையும் நெகிழச் செய்தது. மீசையுடன் கம்பீரமாக இருக்கும் காவலர், சிறு குழந்தையைப் பார்த்துச் சிரித்த புகைப்படம், சென்னை வெள்ள துயரத்தை மறந்து, அனைவரையும் ரசிக்கச் செய்தது. இந்நிலையில், அந்த காவலரின் பெயர் தயாளன் எனத் தகவல் வெளியானது.
தலைமைக் காவலரான தயாளன், தொடர்ந்து, வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். நூற்றுக்கணக்கானோரை, மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ள தயாளன், குழந்தையுடனான சிரிப்புடன் ஒற்றைப் புகைப்படத்தின் மூலம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்து விட்டார். அந்தப் புகைப்படம் வைரலான நிலையில், தயாளன் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், துரைப்பாக்கம் விபிஜி அவென்யூவில் 500-க்கும் மேற்பட்டோரை மீட்டோம். அப்போது கைக் குழந்தையுடன் வந்த ஒரு குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து வந்தேன். போலீஸ் சீருடையில் இருந்ததால் குழந்தை உங்களை பார்த்து குழந்தை பயப்படப் போகிறது என குழந்தையின் அம்மா கூறினார். அவர்கள் பாதுகாப்பாக வர வேண்டும் என்பதற்காக குழந்தையை நான் வாங்கிக் கொண்டு தண்ணீரில் நடந்து வந்தேன்.
அப்போது, குழந்தை தன்னைப் பார்த்து சிரித்ததால், நானும் குழந்தையைப் பார்த்து சிரித்தேன். குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் 4 நாட்களாக மழை வெள்ளத்திற்கு மத்தியில் தொடர்ந்து பணியாற்றிய களைப்பு பறந்து போய்விட்டது, யதார்த்தமாக நடந்த இந்த நிகழ்வின் போது எடுத்த படம் இந்த அளவுக்குப் பரவும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
தலைமைக் காவலர் தயாளனின் இந்தப் புகைப்படம் பரவிய நிலையில், சென்னை மாநகர ஆணையரும், டிஜிபி அலுவலகத்தில் இருந்தும் உயர் அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்து பாராட்டினராம். போலீஸ் அதிகாரிகள் தன்னைப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் தயாளன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications