"பார்க்கிங்" சண்டை! பக்கத்து வீட்டு பெண்ணிடம் நடிகை சரண்யா பொன்வண்ணன்!.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சென்னை: பக்கத்து வீட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த சண்டை தொடர்பான சிசிடிவி காட்சிகளில் சரண்யா, பக்கத்து வீட்டு பெண்ணிடம் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிடுவது பதிவாகியுள்ளது. தன் மீது தரக்குறைவாக பேசியதாக பக்கத்து வீட்டு பெண் மீது சரண்யாவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அண்மையில் வெளியான பார்க்கிங் பட பாணியில் கார் பார்க்கிங்கிற்காக பக்கத்து வீட்டு பெண்ணுடன் சரண்யா சண்டையிட்டதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் ஸ்ரீதேவி (43) என்பவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு செல்வதற்காக காரை வெளியே எடுக்க முயன்றார். அதற்காக தனது வீட்டின் 20 அடி உயர இரும்பு கேட்டை திறந்தார். அப்போது இரும்பு கேட் மோதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்யா பொன்வண்ணனின் கார் சேதமடைந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சரண்யா பொன்வண்ணன் நேராக ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. பதிலுக்கு ஸ்ரீதேவியும் தகாத வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது. மேலும் ஸ்ரீதேவிக்கு, சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்ரீதேவி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அது போல் தனது காரை சேதப்படுத்தி, தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக ஸ்ரீதேவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை சரண்யாவும் புகார் அளித்துள்ளார்.
இருவரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் சரண்யா நான்ஸ்டாப்பாக கைகளை நீட்டி ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் பொன்வண்ணனும் வந்து ஏதோ பேசுகிறார்.

அண்மையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் என்ற திரைப்படத்தில் ஒரு கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் இருவருக்கு இடையே பார்க்கிங் இடத்திற்காக பிரச்சினை எழும். அது போல்தான் சரண்யா பிரச்சினையும் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சரண்யா பொன்வண்ணன், மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பூ, கருத்தம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்ட அவர் சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியே இருந்தார்.
இதையடுத்து ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து எம்டன் மகன், புலி வருது, களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடித்த வேலையில்லாத பட்டதாரி படத்திலும் சரண்யா நடித்துள்ளார். அதன் பிறகு சாந்தமான, பாசமான அம்மா கேரக்டர் என்றாலே சரண்யாவை கூப்பிடுங்கள் என்ற அளவுக்கு அவருடைய நடிப்பு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.












Click it and Unblock the Notifications