சென்னை ஹோட்டலில் "அந்த" விளம்பரம்.. உள்ளே நடந்தது பாலியல் தொழிலா? உண்மை என்ன? போலீஸ் விளக்கம்!
சென்னை: சென்னையில் நேற்று சின்னமலை பகுதியில் ஹோட்டல் ஒன்றின் முன் இருந்த விளம்பரம் பெரிய சர்ச்சையானது. அந்த ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக வெளிப்படையாக போர்ட் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பர போர்ட் இணையம் முழுக்க மக்கள் இடையே கடும் விமர்சனங்களை சந்தித்தது.
சின்னமலை பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றின் முன் அந்த விளம்பர பலகை இருந்தது. டிஜிட்டல் விளம்பர பலகையில் பாலியல் தொழிலுக்கான விளம்பரம் வெளிப்படையாக கொடுக்கப்பட்டு இருந்தது.
அதிலும் 1000 ரூபாய்க்கு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதாக விளம்பரத்தில் வெளிப்படையாக.. அதே சமயம் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் சென்னையை உலுக்கியது.

பாலியல் தொழில்
இந்தியா முழுக்க பாலியல் தொழில்கள் நடப்பது உண்மைதான். மும்பையில் சில பகுதிகளில் வெளிப்படையாக இந்த தொழில்கள் நடக்கின்றன. ஆனால் சென்னையில் அப்படி எல்லாம் வெளிப்படையாக தொழில்கள் நடப்பது இல்லை. சென்னையில் அங்கங்கே மறைமுகமாக பாலியல் தொழில்கள் நடந்து வருகின்றன. அப்படி இருக்க சென்னையில் இப்படி வெளிப்படையாக விளம்பரமா என்று விமர்சனங்கள் எழுந்தன. அந்த விளம்பரத்தின் வீடியோக்கள் இணையம் முழுக்க பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. என்னது சென்னையில் இப்படியா? என்ன கொடுமை இது? எப்படி இதை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருந்தது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

வீடியோ
இந்த வீடியோ வெளியானதும் சென்னை போலீஸ் இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்கிறோம் என்று ட்விட்டரில் விளக்கம் கொடுத்தது. இந்த விசாரணைக்கு பின்பாக இது தொடர்பாக சென்னை போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில், அந்த சைன் போர்ட் உடனே நீக்கப்பட்டுவிட்டது. இந்த போர்டில் ஓடிய தகவலுக்கு நாங்கள் காரணம் கிடையாது. யாரோ விஷமிகள் இந்த விளம்பரத்தை ஓட விட்டுள்ளனர். பொது வை பை நெட்வொர்க் மூலமாக இதை ஹேக் செய்து மாற்றி உள்ளனர். இதற்கு போதிய பாதுகாப்பு கிடையாது. வை பை மூலமாகவே ஹேக் செய்து இப்படி செய்துள்ளனர்.

விஷமிகள்
இந்த விளம்பர பலகைகளில் default credentials அதாவது பலகைகளை வாங்கிய போது அதில் இருந்த யூசர் நேம் பாஸ்வேர்ட் மாற்றப்படவில்லை. இப்போதும் பழைய யூசர் நேம், பாஸ்வேர்ட்தான் இருந்துள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டுதான் யாரோ ஹேக் செய்து இந்த வேலையை செய்துள்ளனர். விளம்பர பலகைகள் குறித்து எல்லாம் தெரிந்த யாரோதான் இதை செய்திருக்க வேண்டும். அதோடு அந்த ஹோட்டலில் இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தினோம். அந்த விசாரணையில், ஹோட்டலில் தவறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஹோட்டல்
அந்த ஹோட்டலில் பாலியல் தொழில் எதுவும் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஹேக்கிங்கை செய்தது யார் என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம். ஓபன் வை பை நெட்வொர்க் மூலம் ஹேக் செய்ய முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும். எனவேதான் மக்கள் வலிமையான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் இருக்கும் இலவச வை பைகளை பயன்படுத்தும் போதும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications