போலீஸ் எனக்கூறி.. காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு.. ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது!
சென்னை: போலீஸ் எனக்கூறி காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி சென்னை சில்க்ஸ் பின்புறம் காரில் அமர்ந்து சில காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு நபர் போலீஸ் எனக்கூறி காதல் ஜோடிகளை மிரட்டி இருக்கிறார். மேலும் விசாரணை என்ற பெயரில் காரை சோதனையிட்டு காதல் ஜோடியின் பர்சை எடுத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு எச்சரித்து விட்டு சென்று விட்டார்.
இது குறித்து காதல் ஜோடி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தது ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார்(61) என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை
சசிகுமாரை பிடித்து விசாரணை நடத்தியபோது இவர் ஓய்வு பெற்றதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தற்போதும் பணியாற்றுவது போல அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார். அப்போது காதலர்கள் தனியாக காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்திற்குச் சென்று. அந்த பகுதியில் பணியாற்றும் போலீசார் போன்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு. இங்கு காதலர்கள் அமர்ந்து பேசக்கூடாது என்று பயமுறுத்திள்ளார்.

ஜோடிகளை மிரட்டினார்
இந்த விஷயத்தை பெற்றோர்களுக்கு தெரிவித்து விடுவேன் என மிரட்டியும் பெற்றோர்களுக்கு போன் செய்யுமாறும் வற்புறுத்தியும் பெற்றோர் வரும் வரை காவல் நிலையத்திற்கு வந்து இருங்கள் என அழைத்து மிரட்டி ஒருகட்டத்தில் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு செல்வது வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் தனியாக மது அருந்துபவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைது செய்தனர்
இவர் வேளச்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடிகள், சாலையில் காரில் அமர்ந்து மது குடிப்பவர்களிடம், தனியாக இருக்கும் கால்டாக்சி ஓட்டுநர்களிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது இதையடுத்து வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் சிகுமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

போலீசார் அதிருப்தி
காரில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் காதல் ஜோடிகளிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டவர் ஒய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் என்ற தகவல் காவல்துறை வட்டாரத்தில் காவல்துறைக்கு இருந்த நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும் போலீசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications