ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல்.. சென்னையை அதிரவைத்த என்கவுண்டர் சம்பவம்!
சென்னை: ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இன்று அதிகாலையில் ஆயுதங்களை பறிமுதல் செய்யச் சென்றபோது தப்பிக்க முயன்றதால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் ரௌடி திருவேங்கடம்.
சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 11 நபர்களையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. கொலை செய்துவிட்டு ஆயுதங்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதவரம் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கொலையாளிகள் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்று அதனைப் பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று அதிகாலை போலீசார் மாதவரம் புழல் வெஜிடேரியன் நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது புதர் நிறைந்த பகுதிக்கு அருகே சென்றபோது, திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரைத் தாக்க முயற்சித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

திருவேங்கடத்தின் வலது கை தோள்பட்டையிலும், நெஞ்சு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பு 10 நாட்களுக்கும் மேலாக அவரை ஆட்டோவில் சென்று நோட்டமிட்டு அவரின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கூட்டாளிகளுக்கு திருவேங்கடம் தகவல் தெரிவித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
2014-ல் குன்றத்தூரில் நடந்த கொலை, 2015ல் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் நடந்த திருவள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு கொலை ஆகிய வழக்குகளில் தொடர்பு உடையவர் திருவேங்கடம்.












Click it and Unblock the Notifications