ஜெனரேட்டர் இயக்க.. கரூர் சம்பவத்தை தொடர்ந்து எடப்பாடி பிரச்சாரத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள்
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாமக்கல்லில் திட்டமிட்டிருந்த பிரச்சாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் சுற்றுப்பயணம் அக்டோபர் 5, 6 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பயணம் அக்டோபர் 8 ஆம் தேதியில் நடைபெறும் என அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி மறுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. இதனால், அதிமுகவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 9 ஆம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளிலும், வரும் 10 ஆம் தேதி அன்று ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட விதிமுறைகளின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள போலீஸார் தடை விதித்துள்ளனர். எனவே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்காக தனியார் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சோளிபாளையத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியிலும் உள்ள தனியார் நிலங்களில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்துக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம், மொடக்குறிச்சி தொகுதி பிரசாரத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதாவிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.
அதிமுக பிரசாரம் நடைபெற உள்ள இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் போலீசார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாள்களில் பிரசாரத்துக்கான அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் சோளிபாளையம், வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் தலா 10 ஆயிரம் பேர் கூட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்பு இரு இடங்களிலும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், அவசர காலத்தில் வாகனங்கள் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications