நல்ல நாள் அதுவுமா.. பட்டாசால் பாய்ந்த கேஸ்! தீபாவளி அன்று தமிழ்நாட்டில் விதிமீறியவர்கள் மீது ஆக்சன்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு நிர்ணயம் செய்த நேரத்தை மீறி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
நேற்று தீபாவளி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடினர். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு விதித்து இருக்கிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நேர விதிமுறைகளை கடைபிடிக்காமல் பலர் அதிக நேரம் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் காற்று மாசு தரக் குறியீடு 200 ஐ தாண்டி பதிவானது. அதேபோல், கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்று மாசு தரக் குறியீடு உயர்ந்தது. இந்த நிலையில் அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் பட்டாசு வெடிப்பதில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் 199 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். திருச்சி மலைக்கோட்டை, தில்லைநகர், பொன்மலை காவல் நிலையங்களில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரோட்டிலும் 9 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
முன்னதாக, "எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, காவல்துறை அவசர உதவி எண்.100, அவசர உதவி ஆம்புலன்ஸ்:108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications