மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரல.. முன் ஜாமினை ரத்து பண்ணுங்க.. ஐகோர்ட் படியேறிய போலீசார்!
சென்னை: மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்திருக்கும் மனுவை நீதிபதி நிர்மல் குமார் விசாரிக்கவுள்ளார்.
தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2025 மே 2ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், விபத்து ஏற்படுத்திய கார் தன்னை நீண்ட தூரம் தொடர்ந்து வந்தது. தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தருந்தனர். முகத்தில் நீண்ட தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ அவரது ஆதரவாளர்களோ காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் தான் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தனக்கு எதிராக காவல் துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, தனக்கு எதிராக உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஆதீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கார்த்திகேயன், ஆதீனம் 10 ஆயிரம் ரூபாய்க்கான சுய உத்தரவாதம் வழங்க வேண்டும். மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேலே ஆனதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காவல் துறை நேரடியாக சென்று விசாரணை செய்யலாம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள மடத்தில் வைத்து மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கும் மனுவை நீதிபதி நிர்மல் குமார் விசாரிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications