ஆளே இல்லாத நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. வெடித்தது சர்ச்சை!
சென்னை: கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் சூர்யா வீட்டுக்கு அரசு செலவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வரும் நிலையிலும் அவரது சென்னை வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமகவினர் பலர் சூர்யாவிற்கு மிரட்டல் விடுத்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நாளடைவில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கும் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த படத்தை திரையிடக்கூடாது என்று சில மாவட்டங்களில் தியேட்டர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால், சூர்யாவின் தி.நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. அந்த சர்ச்சைகள் ஓய்ந்த பிறகும் தற்போது வரை சூர்யா வீட்டுக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படாமல் இன்று வரை தொடர்கிறது.
சூர்யா வீடு முன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த நான்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சூர்யா தன் மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். எனினும் அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நடிகர் வீட்டுக்கு யாருடைய உத்தரவுபடி, எந்த தேதியிலிருந்து ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஆர்டிஐ மூலம் அளிக்கப்பட்டுள்ள பதிலில், "காவல்துறை ஆணையர் உத்தரவுப்படி, கடந்த 2021 நவம்பர்15 முதல் தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு மறு ஆய்வு குழு தீர்மானத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீஸ் பாதுகாப்பு அளிக்க, சூர்யா ஏதாவது பணம் செலுத்துகிறாரா என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டு காலமாக, நடிகர் சூர்யாவிடம் பணம் பெறாமல் அரசு செலவில் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருவது ஏன் என சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications