"பைக்" சாகசங்களை செய்வோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை நிறுத்துங்க.. சென்னை ஐகோர்ட் கருத்து
சென்னை: பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, அவர்களைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
இந்தியா டூவீலர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்தக் காலத்து இளைஞர்கள் பலரும் அதிவேகமாகச் செல்லும் ரேஸ் பைக்குகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ரேஸ் பைக்குகளை வாங்கும் இந்த இளைஞர்கள் பொதுமக்கள் செல்லும் சாலைகளிலேயே பைக் சாகசங்களைச் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் ஆபத்து. சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்து.
பைக் சாகசம்: பைக் சாகசங்கள் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சாலைகள், அதாவது ரேஸ் டிராக்குகளில் தான் செய்வார்கள். ஆனால், நம்ம ஊரில் ஆர்வ கோளாறாக இருக்கும் சில இளைஞர்கள் பொதுமக்கள் செல்லும் சாலைகளிலேயே கூட இதுபோன்ற ஆபத்தான சாகசங்களைச் செய்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவும் போது அவர்களைக் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது. ஆனால், பைக் சாகசங்கள் செய்வது குறைந்தது போல தெரியவில்லை.
இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
போலீஸ் அறிக்கை: இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களைத் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுக் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பைக் ரேஸ், பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்துப் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
சீர்திருத்த நடவடிக்கை: இந்த இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் அவர்களைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் இது போன்ற வழக்குகளைக் கையாள்வதற்குத் தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications