இந்தா வந்துட்டாங்கல்ல.. காதலர் தினமாச்சே! சென்னை மகளிர் கல்லூரி சென்ற இந்து அமைப்பு - தடுத்த போலீஸ்
காதலர் தினத்துக்கு எதிராக சென்னை எத்திராஜ் கல்லூரி நோக்கி காவி கொடிகளுடன் சென்ற பாரத் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை: பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரி நோக்கி காவி கொடிகளுடன் ஊர்வலமாக சென்ற பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலர்கள், திருமணமான தம்பதிகள் என பலரும் தங்கள் நேசத்திற்கு உரியவர்களுக்கு பிடித்த அன்பளிப்புகளை வழங்கி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

மதவாத அமைப்புகள்
இந்தியாவில் காதலர் தினம் என்றாலே காதலர்களுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது மதவாத அமைப்புகள்தான். பூங்காக்களில், கல்லூரி வளாகங்களில், திரையரங்குகளில் இருக்கும் காதலர்களை பிடித்த கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்கும் நிகழ்வுகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வந்து இருக்கிறது.

கட்டாய திருமணம்
ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அதற்கு எதிராக மதவாத அமைப்புகள் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று மிரட்டல் விடுப்பதும் வாடிக்கை. கட்டாய திருமணம் மட்டுமின்றி காதலர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன.

பசு தழுவுதல் தினம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது காதலர் தினம் கொண்டாடப்படும் அதே பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று இந்தியாவில் Cow Hug Day எனப்படும் பசு தழுவுதல் தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்தது.

கைவிட்ட விலங்குகள் நலவாரியம்
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தும், கேலி செய்தும் மீம்ஸ்களை பகிர்ந்தனர். காதலர் தினத்தை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடும் விமர்சங்களை தொடர்ந்து பசு தழுவுதல் தினத்தை கைவிடுவதாக விலங்குகள் நலவாரியம் அறிவித்தது.

இந்து அமைப்பு ஊர்வலம்
இருப்பினும் சில இந்துத்துவ அமைப்புகள் இந்த நாளை பசு தழுவுதல் தினமாக கொண்டாடுவோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் காலதர் தினமான இன்று காலையில் சென்னை எழும்பூரில் அமைந்து உள்ள புகழ்பெற்ற எதிராஜ் கல்லூரியை நோக்கி பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பினர் காவி கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கலாச்சார சீரழிவான காதலர் தினத்தை புறக்கணிப்போம் என பதாகைகளையும் அவர்கள் எடுத்து சென்றனர்.

தடுத்த காவல்துறை
காதலர் தினம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறி எதிராஜ் கல்லூரி அருகே கும்பலாக பாரத் இந்து முன்னணி அமைப்பினர் திரண்டதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை எழும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications