கானா நாடு வரை லிங்க்.. பிரசாத் கைக்கு கொக்கைன் வந்தது எப்படி? ஸ்ரீகாந்த் கேஸில் பெரிய ட்விஸ்ட்
சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மீது விரைவில் போதைப்பொருள் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்னமும் போதை பொருள் வழக்கில் கைது செய்யபடவில்லை.
அவருக்கு பணம் எப்படி வந்தது? அவருக்கு யார் பணம் கொடுத்தது? யார் போதை பொருள் கொடுத்தது? எத்தனை போதை பொருள் பார்ட்டிகளை நடத்தி உள்ளார்? எந்தெந்த நடிகர்கள், நடிகைகளுக்கு போதை பொருட்களை வழங்கி உள்ளார்? என்று விசாரணைகள் செய்யப்பட உள்ளன.
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு
முன்னதாக பிரசாத் குறித்து சென்னை போலீசார் வெளியிட்ட அறிக்கையில், சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2005ம் தேதி அன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2-வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட எதிரி பிரசாத் என்பவரை முழுமையாகவும், அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சம்மந்தப்பட்ட எதிரியின் வீட்டினை சோதனை செய்து, வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் சில ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இந்த கொலை முயற்சி வழக்கு மட்டுமல்லாமல் இடங்களில், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி சுமார் ரூபாய் 2 கோடி அளவில் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவருகிறது.

எதிரி TNPSC, Chennai Corporation, Water Board, Income Tax, Railways துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஒவ்வொரு நபரிடமிருந்தும் ரூபாய் 2 லட்சம் முதல் 30 லட்சம் வரை சுமார் 200 நபர்களிடம் பணம் பெற்றிருப்பது புலன் விசாரணையில் தெரியவருகிறது. இது சம்மந்தமாக எதிரியுடன் தொடர்பில் இருந்த மதுரை மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட வேலை வாய்ப்பு மோசடி சம்மந்தமாக பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
பிரசாத் என்பவர் இதுமட்டுமல்லாமல் அவருக்கு தெரிந்த சந்தோஷ் என்பவர் மூலம் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் Call Details மற்றும் Location பெற்று, அவர்களை மிரட்டி பணம் பெற்றிருப்பது தெரியவருகிறது. இது சம்மந்தமாக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் விசாரணையில் பிரசாத் என்பவருக்கு பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் பிரதீப்பின் வெளிநாட்டு நண்பன் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் உட்பட சில நபர்களிடமிருந்து கடந்த 3 வருடங்களாக கொக்கைன் என்ற போதைப்பொருளை பெற்று, தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக சில இடங்களில் அவரது நண்பர்களுக்கு போதை விருந்தும் தந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது கொக்கைன் போதை மருந்து 11-கிராம் அளவிலும், இது சம்மந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications