சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் பலகையில ஏறி செல்ஃபி.. அட்டகாசம்.. அதிர வைத்த மாணவர்கள்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஏறி நின்று கத்தி கூச்சலிட்டு, ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்த 30க்கும் மேற்பட்ட பச்சையப்பபா கல்லூரி மாணவர்களால் ரயில் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கு விரைந்த ரயில்வே போலீசார், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரித்து அனுப்பினர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் வழக்கு, கோர்ட்டு என அலைய நேரிடும் என எச்சரித்தனர்.
சென்னை சென்ட்ரலில் மிகப்பெரிய ரயில் நிலையம் இருக்கிறது. இங்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல ஒரு ரயில் நிலையமும், புறநகர் ரயில்கள் செல்ல ஒரு ரயில் நிலையமும் இருக்கிறது. புறநகர் ரயில் நிலையத்திற்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ரயில் நிலையத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள் என்பதால், காலை, மாலை நேரங்களில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் கல்லூரி மாணவர்கள் சிலர், குழுவாக செல்லும் போது, எப்போதுமே ஹீரோக்கள் என்ற மனநிலையில் அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கம்.

ரயில்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் சாகசம் செய்வார்கள். அந்த ரயில்களில் செல்லும் பெண் கல்லூரி மாணவிகளில் முன்னிலையில் கெத்து காட்டுவதாக நினைத்து சில மாணவர்கள் அடிக்கடி அட்டகாசம் செய்தபடி பயணிப்பது வழக்கம். சில நேரங்களில் பெண்களை கேலி செய்வதும் நடக்கும்.
இவர்களின் தொல்லைகளை அவ்வப்போது ரயில்வே போலீசார் கட்டுப்படுத்தினாலும் குறைந்தபாடில்லை.. மாணவர்கள் என்பதால் எதிர்காலம் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து மட்டுமே அனுப்புவார்கள். ரூட்டு தல என்பது போன்ற பாணியில் கூட்டம் கூட்டமாக கும்மாளம் போடுவதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ரயில் நிலையத்திற்கு வந்தார்கள். அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் பலகையில் ஏறி நின்று கத்தி கூச்சலிட்டு, ஆட்டம் போட்டுள்ளார்கள். மேலும் தங்கள் கல்லூரி பேனரை பெயர் பலகையில் வைத்து குழுவாக புகைப்படம் எடுத்துள்ளார்கள். நடைமேடையில் மாணவர்கள் செய்த அட்டகாசத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகள், பெண்கள் என அனைவரும் அச்சப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ரயில்வே போலீசார் வந்தனர்.
தகவலின் பேரில் ரயில்வே போலீசாருடன், ரயில்வே பாதுகாப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள், மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரன், அவர்களிடம் பேசும் போது, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் வழக்கு, கோர்ட்டு என அலைய நேரிடும் என கடுமையாக எச்சரித்தார். பின்னர் அவர்களிடம் பெயர், விலாசத்தை மட்டும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தார். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கல்லூரி முதல்வரிடம் பெயர் பட்டியல் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம் வெறும் எச்சரிக்கை மட்டும் செய்து மாணவர்களை அனுப்பிவைத்த ரயில்வே போலீசாரின் செயலுக்கு ரயில் பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் , மற்றவர்கள் இதுபோன்ற செயல்களை செய்ய பயப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications