தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. 57 லட்சம் குழந்தைகள் இலக்கு! எங்கெங்கு வழங்கப்படும்?
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.

இந்த மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைடர் உபயோகிப்பது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபடும் குழந்தைகளை கண்டறிந்து சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. முகாம் நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது.
இது போல் குழந்தைகளின் வசதிக்காக இன்று முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள். சோதனை சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். நடமாடும் குழுக்கள் மூலம் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications