திராவிட மாடல் காலாவதியானதா? - ஆளுநருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஆவேசம்
சென்னை: ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அளித்துள்ள பேட்டி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அந்தப் பேட்டியில் ''திராவிட மாடல்' என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான கொள்கை' என்று ஆளுநர் விமர்சித்திருக்கிறார்.
இதற்கு எதிராக திமுக அமைச்சர்கள் பலரும் மிகக் கடுமையான எதிர்விமர்சனத்தை வைத்து வருகின்றனர். இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசை விமர்சித்துப் பேசுவதும் முதன்முறை அல்ல; இது தொடர்கதையாகி இருக்கிறது.

மாநில அரசிடம் சம்பளம் வாங்கும் ஆளுநர்: இது குறித்து எழுத்தாளர் அருணனிடம் பேசினோம், அவர், "ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேட்டியை நான் முழுமையாகப் படித்தேன். இப்படி பேட்டி கொடுத்திருப்பது ஆளுநருக்கு அழகு இல்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர்தான் இப்படிப் பேச முடியும்.
அரசாங்கத்தை அவர் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று நினைத்தால், ஆளுநர் பதவியிலிருந்து விலகி, பாஜகவுக்கு மாநிலத் தலைவராகி இப்படிப் பேசலாம். அல்லது புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்துக்கூடப் பேசலாம். அது அவரது அரசியல் உரிமை.
ஆனால், ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசனம் உருவாக்கித் தந்துள்ள பதவி. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி அல்ல. ஒன்றிய அரசின் நியமனப் பதவி.

மாநில அரசிடம் இருந்து மாதச் சம்பளம் வாங்கக் கூடிய பதவி. அதிலிருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் குற்றஞ்சாட்டிப் பேசுவது என்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல். அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள பொறுப்பை உணராது அவமதிக்கும் செயல்.
அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை ஆளுநர் முன்வைக்கிறார். ஆளுநர் உரையில் திராவிட மாடல் அரசு என்று எழுதிக் கொடுத்து அதை அங்கீகரிக்கச் சொல்கிறார்கள் என்கிறார்.
திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் சட்டமன்ற உரையில் உச்சரிப்பதால் அதை அவர் அங்கீகரித்ததாகி விடாது. இவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு மாநில அரசு எழுதிக் கொடுப்பதை எல்லாம் வெறுமனே வாசிக்க வேண்டியவர்தான் ஆளுநர். அதை வாசித்தாலேயே அதில் உள்ளவற்றை எல்லாம் ஆளுநர் அங்கீகரித்ததாகப் பொருள் இல்லை.

அதை வாசித்துவிட்டு ஆளுநர் போய்விடுவார். அதன் மீது நடக்கும் விவாதத்திற்குப் பதிலளிக்கப் போவது முதலமைச்சர்தான். அதனால்தான், ஆளுநர் உரையில் தனது அரசின் கொள்கைகளை, கோட்பாடுகளை எழுதிக் கொடுத்து உரை நிகழ்த்தச் சொல்கிறார். இப்படி இவர் பேசுவது எல்லாம் அபத்தமாக உள்ளது. ஆளுநர் பதவி என்பது ஓர் அலங்காரப் பதவி.
ஆளுநர் ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: ஆளுநர் தனது உரையில் 'மை கவர்ன்மெண்ட்' என்றுதான் குறிப்பிடுவார். அமைச்சரவை சார்பாகத்தான் உரையை வாசிக்கிறார். அதற்கு மாறாகப் பேசுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்து.
அடுத்து ஆளுநர் அவரது பேட்டியில் திராவிட மாடல் அரசு என்று ஒன்று கிடையாது என்கிறார். இதை இவர் எப்படிச் சொல்கிறார்? இது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதிலே திராவிடம் என்ற சொல் இல்லாமல் வேறென்ன இருக்க வேண்டும் என்று ஆளுநர் எதிர்பார்க்கிறார்.

ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள மோடி என்ன சொல்கிறார்? இது இந்துக்களின் அரசு என்கிறார். நாங்கள் இந்து ராஷ்ட்டிராவை அமைக்கப் போகிறோம் என்கிறார். இவர்களை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையே அதுதான்.
அப்படி என்றால் இதை எல்லாம் விமர்சித்து குடியரசுத் தலைவர் பேட்டிக் கொடுக்கலாமா? வேறு கட்சியைச் சார்ந்த நான் மோடி அரசை விமர்சிக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் விமர்சிக்கக் கூடாது. பாஜக அரசு எழுதித் தரும் உரையைத்தான் குடியரசுத் தலைவர் வாசிக்க வேண்டும். இதை ஆளுநர் ரவி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆளுநர் தனது பேட்டியில் திராவிட சித்தாந்தம் காலாவதியானது என்கிறார். நேரடியாக நான் கேட்கிறேன். திராவிட சித்தாந்தம் காலாவதியாகிவிட்டது என எதை வைத்து முடிவுக்கு வருகிறார் என்று ஆளுநர் விளக்க வேண்டும்.
அந்தக் கருத்தியல் காலாவதி ஆகியிருந்தால், 2021இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஓட்டுப் போட்டு எப்படி திமுகவை ஆட்சியில் அமர வைத்தார்கள்? இது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் பேச்சு இல்லையா? மக்கள் எல்லாம் சேர்ந்துதான் திராவிட முன்னேற்றக் கழக அரசை ஆளும் கட்சியாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

இந்தப் பேச்சு ஆளுநருக்கு அழகல்ல. அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். இனி அந்தப் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது" என்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்திய திராவிடம்: இந்தச் சர்ச்சை குறித்து சபாநாயகர் அப்பாவு பல வரலாற்றுத் தரவுகளை முன்வைத்துள்ளார். இந்திய அளவில் ஏன் திராவிட மாடலை வலதுசாரிகள் ஏன் எதிர்க்கிறார்கள் எனத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் அவர்.
"சமூகநீதிக் கொள்கை நீதிக்கட்சி காலத்தில் உருவானது. அதனடிப்படையில் உருவானதுதான் 'திராவிட மாடல்'. இன்றைக்கும் தேசிய அளவில் பட்டப்படிப்புக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 26%. ஆனால் தமிழ்நாட்டில் இன்றைக்குப் பட்டப்படிப்புக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை, அதாவது இப்போது படித்துக் கொண்டிருப்பவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், 71%.
இந்தளவுக்கு உயர்கல்வி படித்த பெண்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதற்குக் காரணம், திராவிட இயக்கமும் திராவிட மாடல் ஆட்சியும்தான்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டதே தமிழ்நாட்டிற்காகத்தான். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு 10% என்று அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தது.

செண்பகம் என்ற அம்மையார் தமது கணவர் துரைராஜ் இறந்துவிட்ட பிறகு மருத்துவப் படிப்புக்கு இடம் வேண்டும் எனக் கேட்டு நீதிமன்றம் போனார். அந்த வழக்கை மறைந்த வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமிதான் நடத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்காக அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் குழுவில் அல்லாடி கிருஷ்ணசாமியும் ஒரு உறுப்பினராக இருந்தவர்.
செண்பகம் விண்ணப்பிக்கவேயில்லை. ஆகவே அவருக்கு சீட்டு தரமுடியாது என்றது அரசு. ஆனால், உயர்நீதி மன்றமும் உச்சநீதிமன்றமும் அவருக்குப் படிக்க இடம் கொடுக்க உத்தரவிட்டன.
இன்றைக்கு இட ஒதுக்கீடு நீடிக்கிறது என்றால், அதற்கு முதல் விதைப் போட்டது திராவிட இயக்கம்தான். தமிழ்நாடுதான். பெரியார்தான். அண்ணாதான். கலைஞர்தான்.
அதே வழியில் இன்றைக்குப் திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்டாலின் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு: மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்குக் கொடுக்கின்ற இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து நமது முதலமைச்சர் ஸ்டாலின்தான் நீதிமன்றம் வரை சென்று போராடி அந்த உரிமையை வாங்கி கொடுத்தார்.
ஓபிசி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு இந்திய அளவில் 4022 இடங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் பல் மருத்துவம் படிப்பதில் 1000 இடங்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதன் மூலம் இந்திய அளவில் ஸ்டாலின் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதன் காரணமாக வடமாநிலங்களில் இன்றைக்குச் சமூகநீதி கொள்கையைப் பலரும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த அச்சத்தில்தான் ஆளுநர் இப்படிப் பேசுகிறார்" என்றார்.
திராவிடம் என்பது சமூகநீதிதான்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடம் பேசினோம்...
" சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம், சுதந்திரம் இவை எல்லாம் சேர்ந்த கருத்தாக்கம்தான் திராவிடம்.
திராவிடம் முன்வைக்கும் சமூகநீதி என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமத்துவம் என்ற சொல் 18 இடங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவி உயர்த்திப்பிடிக்கின்ற சனாதனம் என்ற சொல், அரசியலமைப்புச் சட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளதா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
ஆளுநர் தொடர்ந்து தமிழுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்பட அவர் முயற்சிக்க வேண்டும். ஆளுநர் ரவியின் இந்தக் கருத்துகள் மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாக இருக்கின்றன" என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும்போது, "இந்தியத் துணைக்கண்டத்தில் கல்வி மறுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு வர்க்க சமூகம் சாதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
அந்த வர்க்க கட்டமைப்புக்கு எதிரான போராட்டம் திராவிட இயக்கத்தின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 'திராவிட மாடல்' என்பது சமூகநீதி அடிப்படையில் எல்லோரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுதான். எனவே திராவிட மாடல் என்பது எங்களது இனத்தின் குறியீடு" என்றார்.
ஒரே பாரதம் எப்போது ஏற்பட்டது? இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், "ஆளுநர் ரவி இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வேறு எங்கேயாவது கடல்கடந்த நாட்டில் இருக்கிறாரா என்று புரியவில்லை. இன்றைக்கு திராவிட மாடல் என்பதைப் பின்பற்றித்தான் வட இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ஒற்றை சிந்தனைதான் திராவிட மாடல்.
ஆளுநர் ரவிக்கு திராவிட மாடல் பற்றி தெரியவில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்வதைத் தான், ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது என்கிறாரா ஆளுநர்? மக்கள் 4 வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று இவர்கள் சொல்வது ஆபத்தானது.
இவர்கள் சொல்லும் ஒரே பாரதம் 1947இல் ஏற்பட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கை எனச் சொல்லிவிட்டு, நாடு முழுவதும் ஒற்றைக் கல்விமுறையைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.
பாஜக ஆளுகின்ற உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் கல்வியில் ஏன் முன்னேறவில்லை? தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேருகின்றவர்களின் சதவீதம் முன்னேறி இருப்பது ஏன்? ஏன் இவ்வளவு பொய்களைச் சொல்கிறார்கள்?" என கேள்வி எழுப்புகிறார்.
எடப்பாடியைப் போன்று இருக்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, "திராவிடக் கொள்கை காலாவதியாகிவிட்டது எனச் சொல்வதற்கு தனிப்பட்ட ஆர்.என். ரவிக்கு உரிமை உண்டு; ஆனால் ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவிக்கு அந்த உரிமை இல்லை.
சமூகநீதிக்காகப் போராடியதால் தான் இன்றைக்குத் தமிழ்நாடு உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது. இதுபோன்ற பெருமை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அறவே இல்லை. அவர்களால் எந்த மாநிலமும் முன்னேறவில்லை.
ஆளுநர் இப்படி வெளிப்படையாக ஒரு மாநில அரசை விமர்சிக்கக் கூடாது. அது தவறு. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கிறது என்று ஆளுநர் ரவி பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால், அவரது கொள்கையின் மீதுதான் மரியாதை இல்லை என்கிறார். ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியைப் போன்று இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஸ்டாலின் அப்படி இல்லாதது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வருத்தம் இப்போது கோபமாக மாறி இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications