மைன்ட் வாய்ஸ் மன்னாரு... ஆக.. எனவே.. நீங்க பேசாததா.. நான் என்ன தப்பு செஞ்சேன் கோப்பால்!
சென்னை: மக்களே ஜனங்களே.. ஓ.. இரண்டும் ஒன்னுதானா.. மைன்ட் வாய்ஸ் மன்னாரின் அட்வான்ஸ் சன்டே வாழ்த்துகள் (நாளைக்கு நான் லீவு பாஸ்.. அதான் இன்னிக்கே).
நேத்து பூராவும் வேலூர்தான்.. ஏசிஎஸ் ஜொலித்த காட்சிகள்.. பின்னர் இறங்கி வந்து கதிர் ஆனந்த் வெளுத்த களேபரங்கள் என நாள் முச்சூடும் நயமாகப் போய் கலகலப்பாக முடிந்தது.
ஆனால் இந்த களேபரத்துக்கு மத்தியிலும் நம்ம காதுக்கு மட்டும் வேற வேற சத்தமெல்லாம் நிறைய கேட்டுச்சு (அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு).. அதையெல்லாம் மெல்ல அசை போட்டுப் பார்த்தப்போது.. அட அதை விடுங்க ரொம்ப லென்த்தா போகுது.. மேட்டருக்குள்ள போலாம் வாங்க.
அழறதா, சிரிக்கிறதான்னே புரியல பாஸு.. அதிகாரம் பறிபோன பின்னும் மடங்காத மணிகண்டன்!
சொன்னா கேளுண்ணே
வேலூர் தேர்தலில் நாங்களே வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் மனதில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளோம். லோக்சபா தேர்தல் முடிந்த இந்த குறுகிய காலத்தில் தி.மு.க. தேய்பிறையாகவும், அ.தி.மு.க. வளர்பிறையாகவும் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார். (இந்த மாதிரியான மன ஓட்டத்தை அப்படியே வெச்சிட்டு இருக்குறது நல்லதில்லண்ணே. தோத்துப் போன பிறகும் வெற்றின்னு பேசிட்டு இருக்குறது அப்படியொன்னும் சரியா தெரியலை. அமைச்சரான உங்ககிட்ட இதுக்கு மேலே வெளிப்படையா சொல்ல வேண்டியதில்ல....)
ஒத்துக்க வேண்டியதுதான்
வேலூர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதை வெற்றி என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் தேர்தல் விதிகள், முடிவுகளின்படி தி.மு.க. வெற்றியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்: தமிழிசை. (உறுப்பினர் சேர்க்கை இடத்துக்கு பிச்சைக்காரங்களை கொண்டாந்து உக்கார வைக்கிற லெவல்லதான் நம்ம கட்சியே இருக்குது. நமக்கு எதுக்கு இம்புட்டு வாய்பேச்சு?ன்னு உலகம் உங்கள கேக்காதாக்கா?)
சேச்சே.. ஜனநாயகம் முக்கியமாச்சே
மக்கள் ஏமாந்து ஓட்டளித்துவிட்டனர்! என சொல்வது மக்களை அவமதிப்பதற்குச் சமம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, அதை ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் வெளிப்பாடு: மைத்ரேயன். (இப்பல்லாம் நீங்க ரொம்ப ஜனநாயகம் பேசுறீங்க, கட்சியின் போக்கை போட்டுத் தாக்குறீங்க. அப்புறம் எப்ப அறிவாலயம் பக்கம் போறீங்க? அதையும் சொல்லிடுங்க மைத்து!)
பஞ்சு மிட்டாய் யாவாரம்தான்
புதுவை மாநிலத்தில் துணை நிலை கவர்னரால் தினமும் துன்பப்படுகிறோம். நாங்கள் மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஆனால், மாநில அந்தஸ்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியனாக்கிட்டாங்க: - புதுவை முதல்வர் நாராயண சாமி. (என்ன தல பண்றது? நம்ம கட்சி பண்ணின சேட்டைகள் அப்படி. கைவண்டி வாங்குறதுல துவங்கி காமன்வெல்த் வரைக்கும் ஊழலோ ஊழல்ன்னு போட்டு வெளுத்தீங்க. அதான் மக்கள் வெச்சு செஞ்சுட்டாங்க. பத்து வருஷமா பஞ்சுமிட்டாய் யாவாரம்தான் . நோ வெற்றி, நோ பதவி, நோ அதிகாரம்)
அண்ணே சுதாரிங்க
காஷ்மீர் மக்களின் தலைவிதியுடன் விளையாடிய முதல் குற்றவாளி காங்கிரஸ்தான். அவர்களின் அகராதியில் ‘நட்பு, நன்றி' எனும் இரு வார்த்தைகள் கிடையவே கிடையாது. என ஷேக் அப்துல்லா என்னிடம் தெரிவித்துள்ளார்: வைகோ (அண்ணே, நீங்க மைண்ட் வாய்ஸுன்னு நினைச்சு ஓப்பனா பேசிட்டு இருக்கீங்க)
எதுக்கு உருவுறீங்க
மாநில தலைவர் பதவிக்கான லிஸ்டில் என் பெயரும் பல முறை இருந்திருக்கிறது. ஆனாலும் தலைவராக யாரை அமர்த்துவது? என்பதில் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு என் பணிகளை தொடர்ந்து செய்வேன்: செல்லக்குமார் எம்.பி. (பாஸு, கே.எஸ்.அழகிரி கேப்டன்ஷிப்ல கட்சி ஒழுங்காதானே போயிட்டிருக்கு! நீங்க ஏன் திடீர்ன்னு கட்டய உருவுறீங்க? இது யாரோட அஸைன்மெண்ட்டு? அரசரா இல்ல இளங்கோவனா இல்ல சிதம்பரமே கொடுத்துட்டாரா?)
நாம பேசலாமாண்ணே
சட்டசபை என்பது மக்கள் பணியாற்ற அமைக்கப்பட்டிருக்கும் களம். மற்ற அமைச்சர்கள் ஒன்றிரண்டு மாற்றிப் பேசலாம். ஆனால் முதல்வர் என்பது பொறுப்புள்ள பதவி. அவர் மாற்றிப் பேசுவது தார்மீக செயல் அல்ல: மாஜி மேயர் மா.சுப்பிரமணியன் (தார்மீகத்தை பத்தி நாம பேசுறது சரியாண்ணே, அப்புறம் சென்னையில அந்த சிட்கோ நிலத்துல நீங்க ஆக்கிரமிப்பு செஞ்சு வூடு கட்டியிருக்கிறதா ஒரு புகார் இருக்குதே, அதை எந்த மீகத்துல சேர்க்குறது?)
எது ஏது
ராஜ்யசபாவில் விவாதத்தின் போது, எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழியில் பேசியது, நாட்டுக்கும் எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது: ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு. (நீங்க மகிழ்ச்சின்னு சொறது....இந்தியில பேசின எம்.பி.க்களைப் பத்தியா இல்ல தெலுங்குல மாட்லாடுன எம்.பி.க்களை பத்தியா தலைவரே!)
கூட இருந்தே ரிவிட்டா
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக கண்டிக்க முடியாது. அதில் பல சாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக்குவது வரவேற்கக் கூடியது ஆகும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங். (ராகுல் மைண்ட் வாய்ஸ்...'கெரகம் இதுக்கு வைகோ எவ்வளவோ பரவாயில்லை. இவிய்ங்க உள்ளுக்குள்ளே ஒக்காந்துகிட்டு ரிவிட் அடிக்கிறாய்ங்களே!')
- ஜி.தாமிரா