பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பல் ஒன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். இதில் அருளானந்தம் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக இருக்கிறார்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/yiWMqDen7D
— AIADMK (@AIADMKOfficial) January 6, 2021
இதனிடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா அடிக்காதீங்கண்ணா.. இன்னமும் ஒலிக்கும் கதறல்.. ஒருவரை கூட விடாமல் தண்டிக்கணும்.. ஸ்டாலின்
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அருளானந்தத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என துணை சபாநாயகரும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அவரை நேற்று முன் தினம், தான் நேரில் பார்த்ததாகவும் கூறிய பொள்ளாசி ஜெயராமன், அதிமுகவில் அவர் சிறிய நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் மற்றபடி எந்த சம்பந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.