வழக்கு விசாரணையில் அமைச்சர், டிஜிபி தலையிடுகிறார்கள்.. பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார்
சென்னை: சிலை கடத்த தடுப்பு பிரிவுக்கு வசதிகள் செய்த கொடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மற்றும் டிஜிபி விசாரணையில் தலையிடுவதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்க வேல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்க சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்க வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எஸ்பி பதவி உருவாக்கப்ட்டுள்ளது.

எஸ்பியிடம் சொல்கிறார்கள்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியின் கீழ் பணியாற்றுவர்களை எஸ்பி ராஜேஷ்வரியிடமும், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிடமும் வழக்கு விவரங்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிபி தலையிடுகிறார்
ஒரு அமைச்சரும் , டிஜிபியும் விசாரணையில் தலையிடுகிறார்கள். குறிப்பிட்ட 4 வழக்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுகிறார். சிலை கடத்தல் தொடர்பான 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளன.

துப்புரவு பணிக்கு நிதி ஒதுக்கவில்லை
சிலை கடத்தல் பிரிவுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையும் தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை. திருச்சி சிறப்பு அலுவக முகாமில் துப்புரவு பணிக்கு கூட நிதி ஒதுக்கவில்லை. சிறப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்புகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

டிஜிபிக்கு எதிராக வழக்கு
எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியாநாதன, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டிகே ராஜேந்திரன், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications