வைகோ சவாலை ஏற்க தயார்.. பொன்.ராதாகிருஷ்ணன் பதில் சவால்
Recommended Video

சென்னை: வைகோ சவாலை ஏற்க தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்தால், கருப்பு கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து திமுகவிலிருந்து வெளியேறியவர் வைகோ.

சதி செயல்
சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைக்க சபதம் புரிந்து, தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என்றுதான் மதிமுகவை உருவாக்கினார். இன்று என்ன நிலை உருவாகி உள்ளது என அவருக்கு தான் தெரியும். எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும் மாற்றியுள்ளது.

அரசியல் ஆதாயம்
பிரதமரை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதும் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதும் சிலரை திருப்திப்படுத்துவதற்காகவும், தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு சில அரசியல் ரீதியான ஆதாயங்களை தேடுவதற்காக மட்டும் என்றே நான் கருதுகிறேன்.

மோடி வருவார்
எதற்காக அவர் சொல்லியிருந்தாலும் கூட, இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்.

அவமானப்படுத்த கூடாது
தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வேண்டுகோள் வைக்கிறேன். யாரையோ திருப்திபடுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம். அது தமிழகத்தில் நடக்காது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications