பண்டிகையை கொண்டாடுங்க! பொங்கலுக்கு 6 நாள் லீவ்.. 17ம் தேதி விடுமுறை அறிவித்தது தமிழக அரசு
சென்னை: பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வசதியாக வரும் ஜனவரி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பொங்கலுக்கு மொத்தம் 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.

Image: Ai created
ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை
அதற்கு மறுநாள் மாட்டுப்பொங்க்கல் (15 ஆம் தேதி), உழவர் திருநாள் (16 ஆம் தேதி) என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை தினமாகும். வெள்ளிக்கிழமை 17 ஆம் தேதி என்பதால் அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்தால் சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 6 நாட்கள் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை கிடைக்கும் நிலை இருந்தது.
இதனால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் 17 ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பிலும் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 25 ஆம் தேதி பணி நாள்
இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் கூறுகையில், "பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14,15,16-ல் அரசு விடுமுறை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொது ஜனவரி 17 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும். ஜன.17 விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.25 சனிக்கிழமை பணி நாளாக இருக்கும்" எனக்கூறப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் அரசு ஊழியர்களும் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்பொது போகி பண்டிகையான 13 ஆம் தேதி திங்கள் கிழமை பணி நாளாகும்.
எனவே அன்றைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டால் 11 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 19 ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அரசு இதையும் பரிசீலித்தால் பொங்கல் பண்டிகையை இன்னும் கூடுதல் உற்சாகமாக கொண்டாட முடியும் என்பது பொதுமக்களின் எதிர்பர்ப்பாக உள்ளது.
சிறப்பு ரயில்கள், பஸ்கள்
பொங்கள் பண்டிகையை கொண்டாட பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். வெளியூர்களில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 6 நாட்கள் தொடர் விடுமுறை வசதியாக இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்க உள்ளது. சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications