சென்னை எழும்பூர் - நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.. பயணிகள் ஹேப்பி
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக, வரும் 11 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 1 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் புக்கிங், வரும் 10 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடவே விருப்பப்படுவர். இந்நாளில் வெளியூர்களில் தனியாக வசித்து வருபவர்களும், குடும்பத்துடன் வெளியூர்களில் வசிப்பவர்களும் சொந்த ஊரில் பெற்றோர் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வருகை தருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை
பெரும்பாலானோர் பணியின் காரணமாக கடைசி நேரத்தில் தான் சொந்த ஊருக்கு புறப்பட வேண்டிய நிலை இருக்கும். இதனால் பஸ் மற்றும் ரயில்கள் கூட்டம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதேபோன்று ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தைவிட டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் எந்தவித சிரமும் இன்றி பயணிகள் செல்வதற்கு வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் பண்டிகை நாட்களின்போது, சிறப்பு பஸ்களை அறிவித்து வருகிறது.
சென்னை - நெல்லை சிறப்பு ரயில்
இதேபோன்று ரயில்வேயும் பண்டிகை நேரத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இருமார்க்கத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் 11 ஆம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் 12 ஆம் தேதி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

எத்தனை மணிக்கு புறப்படும்?
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பயணிகள் வசதி கருதி பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 11 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண் 06101) புறப்பட்டு மறுநாள் மதியம் 1.00 மணியளவில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும்.
முன்பதிவு எப்போது தொடங்கும்?
மறுமார்க்கத்தில் வரும் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30க்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06102) நள்ளிரவு 2.40 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தினை அடையும். வரும் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது. காலை 8.00 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.
நின்று செல்லும் இடங்கள்
சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் செல்லும் இந்த ரயிலானது, மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, டிஎம்வி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications