8 மணிக்கு மிஸ் பண்ணாதீங்க! பொங்கலுக்கு ஊருக்கு போகனுமா? இன்றைக்கு முக்கியமான நாள்! வெளியான அறிவிப்பு
சென்னை: தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜனவரி 4) காலை 8 மணியிலிருந்து தொடங்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, தைப்பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து 20 வழித்தடங்களில் மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் ஜனவரி 11ஆம் தேதி முதல் பல நாட்களுக்கு இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற முக்கிய நிலையங்களில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, ராமேசுவரம், ஈரோடு, செங்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இன்று காலை 8 மணி முதல், ரயில்வே இணையதளம் மூலம் அல்லது ரயில் நிலையங்களிலுள்ள முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்குப் முன்பாக, தைப்பொங்கலுக்கான வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்திலேயே தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். அதில், பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய திருநாளாக இருப்பதால், குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட அதிகமானோர் ஊருக்குச் செல்வதை விரும்புகின்றனர்.
வரும் ஜனவரி 13ஆம் தேதி போகி, 14ஆம் தேதி பொங்கல், 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என மதிப்பிடப்படுகிறது. தனியார் வாகனங்கள், பேருந்துகள் மட்டுமல்லாமல், குறைந்த செலவும் பாதுகாப்பான பயண வசதியும் இருப்பதால் ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications