பொன்முடி வழக்கில் கிளைமேக்ஸ்? இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது இறுதி விசாரணை.. என்னாகுமோ
சென்னை: தமிழக அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டிலிருந்து 2001-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்துகளை சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. பிறகு இதிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை துவக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் பொன்முடி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் பொன்முடி..

அந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 36 லட்சம் அளவுக்கு சொத்துகளை சேர்த்ததாக பொன்முடி மீது புகார் எழுந்து , இதனடிப்படையில் 2001-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் தொடர்ந்து நடந்தது .
பிறகு ஹைகோர்ட் உத்தரவுப்படி வேலூர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், பொன்முடியின் விடுதலையை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு கடந்த 7ம் தேதி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, "வழக்கை வேலூர் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் கேட்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வேலூர் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பொறுப்பாக மாட்டார்" என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி "ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா' அதாவது, அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா ? 5 நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது.
இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் அடங்கிய குழு முன் ஆய்வுக்காக வைக்காமல், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தன்னிச்சையாக வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா?
இந்த கேள்விகளுக்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது என்றால், தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாது. எனவே, இந்த வழக்கை ஏப்ரல் 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications