அரசியல் செய்யாமல்.. ஆளுநர் மாளிகைக்கு செல்லுங்கள்.. 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் பெறுங்கள் -பொன்முடி
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் ஒப்புதல் பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதலமைச்சருக்கு, தி.மு.க. குறித்து குற்றம்சாட்டுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என சாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நினைவூட்டல்
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2000-ஆம் ஆண்டே உத்தரவிட்டது தி.மு.க. அரசுதான்! உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த ஒரே ஆண்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது.

குழப்பங்கள்
2011-இல் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டது இதே அ.தி.மு.க. அரசுதான்! இன்றைக்கு 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்ற நேரத்தில் 7 பேரின் விடுதலையில் அனைத்து குழப்பங்களையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் ஆறு ஆண்டுகளாக இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்துகொண்டிருப்பதும் அ.தி.மு.க. அரசுதான்!

முதலமைச்சர்
முதலில் 2014 தேர்தலுக்காக - ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்து இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்தது அ.தி.மு.க. அரசு. இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி - இரண்டு ஆண்டுகள் அமைதி காத்து விட்டு - இப்போது எங்கள் கழகத் தலைவர் கோரிக்கை வைத்த உடன் பதற்றப்படுகிறார் திரு. பழனிசாமி .

ஆளுநர் மாளிகை
தனது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதலமைச்சருக்கு, தி.மு.க. குறித்து குற்றம்சாட்டுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. தயவு செய்து இதிலும் கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், நேராக ஆளுநர் மாளிகைக்குச் செல்லுங்கள். ஆளுநர் அவர்களை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெறுங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications