கலாமின் "சிஷ்யர்" டூ கமலின் துணைத் தலைவர்.. பொன்ராஜ் கடந்து வந்த பாதை இதுதான்!
சென்னை: அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ் வெள்ளைச்சாமி சென்னை அண்ணா நகர் சட்டசபைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி மக்கள் நீதி மய்யம கட்சியில் இணைந்த பொன்ராஜுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. யார் இவர்?
விருதுநகர் மாவட்டத்தில் தோணுகால் என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றியவர்.

அப்துல் கலாம்
இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் ஆகவும் உள்ளார். இவர் அப்துல் கலாமுடன் இணைந்து மாற்றத்திற்கான விஞ்ஞாபனம் என்ற புத்தகத்தை 2014ஆம் ஆண்டு எழுதியுள்ளார். கலாம் கடைசியாக எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற புயலைத் தாண்டினால் தென்றல் என்ற நூலை எழுதி முடிக்கும் பணியை பொன்ராஜ் மேற்கொண்டார்.

இணை ஆசிரியர்
அப்துல் கலாம் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய நூறுகோடித் துடிப்புகள் என்ற மாதாந்திர இதழின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பொன்ராஜ் பணியாற்றினார். இந்தியாவின் குறிப்பிட்ட 15 மாநிலங்களின் வளர்ச்சியைத் திட்டமிட அப்துல் கலாம் தொகுத்து வழங்கிய வளமைக்கான வழிகள் எனும் தொகுப்பின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பொன்ராஜ்
இவர் அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சியை பொன்ராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கினார். இவரும் மிகச் சிறந்த பேச்சாளர், ஊழலை எதிர்ப்பவர். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடந்த 3ஆம் தேதி இணைந்தார். இவருக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அண்ணா நகரில் பொன்ராஜ் போட்டி
இவர் தற்போது வரும் சட்டசபைத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அப்துல் கலாமுடன் பணியாற்றிய இவரது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அண்ணா நகரில் கரை சேருவாரா பொன் ராஜ் என்பது மே 2ஆம் தேதிதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications