பூந்தமல்லி அருகே இடித்து தள்ளப்படும் கடைகள், வீடுகள்.. அதிரடியாக நடக்கும் பெரிய மாற்றம்
சென்னை: பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி அருகே கரையான்சாவடி, குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ தூணில் வாகனங்கள் செல்லும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் வாகனங்கள் எளிதாக சென்றுவர முடியும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில், பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட உள்ளது. அந்த பகுதி மக்களின் வசதிக்காக, மவுண்ட்- பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ தூண்களின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன,

இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அப்பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை நோட்டீஸ் அளித்து இடித்து அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து கல்லறை பஸ் நிறுத்தம் வரை மெட்ரோ தூண்களின் மீது வாகனங்கள் செல்லும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாகனங்கள் கீழே செல்வதற்காக சர்வீஸ் சாலைகள் மற்றும் கால்வாய்களும் அமைக்கப்பட இருக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக மட்டும் பெருநகர சென்னை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.150 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. மேம்பாலம் அமைப்பதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால், விரைவில் அந்த தடத்தில் பொதுமக்களுக்கான போக்குவரத்து தொடங்க போகிறது. அங்கு வாகன நெரிசலை குறைக்க மெட்ரோவில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இது முடிந்தால் எளிதாக வாகன ஓட்டிகள் சென்றுவர முடியும்.












Click it and Unblock the Notifications