Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூண்டு ரசம் கிடைக்குமா? தமிழில் கேட்ட சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி! வைரலாகும் ட்விட்டர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தமிழில் ‛‛பூண்டு ரசம் கிடைக்குமா'' என 5 ஸ்டார் ஓட்டலின் சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளையிடம் கேட்டதும், அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய சம்பவம் குறித்த விபரமும் வெளியாகி உள்ளது. அதோடு இதுதொடர்பாக சுரேஷ் பிள்ளை பதிவிட்ட ட்விட்டர் போஸ்ட் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணியில் அனைத்து வகையான ஐசிசி தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை எம்எஸ் தோனி மட்டுமே வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

 ‛‛Poondu Rasam kedakkuma’’ MS Dhoni asks to chef Suresh Pillai what happened on 2018? details here

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்துள்ளது.

இந்நிலையில் தான் தோனிக்கு கடல்சார்ந்த உணவுகள் அலர்ஜியாக இருந்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் கடல்வகை உணவுகள் வேண்டாம் என்று கூறிய தோனி சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளையிடம் ஸ்பெஷலாக தனக்கு வேறு ஒரு உணவை தயார் செய்து வழங்கும்படியும், பூண்டு ரசம் கிடைக்குமா? என தமிழில் கேட்டது தொடர்பான தகவலும் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சமையல் கலைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட போஸ்ட் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக சுரேஷ் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் சேர்ந்து எடுத்து செல்பியை பகிர்ந்துள்ளார். மேலும் கடல் உணவை வேண்டாம் என்றும் தமிழில் பூண்டு ரசம் கேட்ட தோனியுடன் அவருக்கு நடந்த சந்திப்பு பற்றியும் விளக்கமாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில் சுரேஷ் பிள்ளை கூறியிருப்பதாவது:

முழு உலகமும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளரான தோனியைக் கொண்டாடும்போது 5 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உணவு பரிமாறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததைப் பிரமிப்போடு நினைத்துப் பார்க்கிறேன். அது 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியாகும். அப்போது இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. நான் பணிபுரிந்த கோவளம் லீலா ஓட்டலில் தான் இந்திய வீரர்கள் தங்கியிருந்தனர்.

பஸ்சில் இருந்து வீரர்கள் ஒவ்வொருவராக இறங்கினர். எனது கண்கள் தோனியை தான் தேடின. அப்போது தான் தனக்கே உரித்தான புன்னகையுடன் தோனி பஸ்சில் இருந்து இறங்கி வந்து எங்களை கடந்து ஓட்டல் அறைக்கு சென்றார். அந்த சமயத்தில் தனது ஹீரோவை பார்த்த குழந்தை போல நான் மாறினேன் தோனியை பார்த்த யாருக்குத்தான் அப்படி இருக்காது?.

ஓய்வுக்குப் பிறகு வீரர்கள் இரவு 7 மணி முதல் தங்களுக்கான உணவு ஆர்டர்களை அளித்தனர். பெரும்பாலான வீரர்கள் கடல்சார் உணவுகளை கேட்டிருந்தார்கள். இரவு 9.30 மணிக்குள் கிட்டத்தட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
ஆனால் நான் காத்திருந்த அழைப்பு 10 மணிக்கு வந்தது. தோனி அறையில் எனக்காக காத்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. ஒரு வினாடி உறைந்துதான் போனேன்.

தொலைக்காட்சியில் அவரை பார்த்து சந்தோஷப்படும் என்னை தனது அறைக்கு அழைத்தார் தோனி. லிப்ட்டுக்கு கூட காத்து இருக்காமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது மாடியில் இருந்த அவரது அறைக்கு ஓடினேன். வேகமாக சென்ற நிலையில் எனக்கு மூச்சுவாங்கியது. இதனால் என்னை சாந்தப்படுத்த ஒரு கணம் எடுத்துக்கொண்ட பிறகு அறையின் கதவை தட்டினேன்.

அப்போது அறையில் இருந்த தோனி, ‛‛ஹாய் Chef! எப்படி இருக்கீங்க? சாப்பிட என்ன இருக்கிறது? என ஹிந்தி, தமிழ் கலந்த மொழியில் கேட்டார். இதையடுத்து அவருக்காக தயார் செய்யப்பட்ட கடல் உணவு வகைகளை பட்டியலிட்டேன். அப்போது, ‛‛என்னால் கடல் உணவு சாப்பிட முடியாது. அதில் எனக்கு அலர்ஜி உண்டு. சிக்கன் குழம்பும், சாதமும் கிடைக்குமா? எனக்கு தொண்டை வலி இருப்பதால் காரமான ரசம் வேண்டும். பூண்டு ரசம் கிடைக்குமா? என தமிழில் கேட்டார்.

சுமார் 20 நிமிடங்களில் அறை எண் 302க்கு உணவுடன் திரும்பினேன். செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, அப்பளம், ரசம் ஆகியவை பரிமாறப்பட்டன. மறுநாள் காலை, ஜிம்முக்கு செல்லும் வழியில், என்னை பார்த்து இரவு உணவு பிடித்திருந்ததாக கூறினார். நான் விண்வெளியில் பறப்பதை போல் உணர்ந்தேன். அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

4 நாட்கள் தான் என்றாலும், நான் பெரிதும் மதிக்கும் மனம் கவர்ந்த என் நாயகனுக்கு உணவு பரிமாறவும் அதன்மூலம் அவரை மகிழ்ச்சியடைய செய்யவும் முடிந்தது. இது என்னுடைய சமையல் வாழ்க்கையில் எப்போதும் சிறப்பம்சமாக இருக்கும். நேற்று இன்று மட்டுமல்ல என்றும் எங்களுடைய தல நீங்கள். உங்களுக்கு வாழ்த்துகள். மீண்டும் உங்களுக்கு உணவு பரிமாறக் காத்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+