சட்டசபை இருக்கை பிரச்சினை! ரசிக்கும் சபாநாயகர்! கண்ணீர் வடிக்கும் தொண்டர்கள்! பூங்குன்றனின் பதிவு
சென்னை: ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் சேருவதற்கு வாய்ப்பு கொடுக்கிறாரா சபாநாயகர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பூங்குன்றன் வெளியிட்டுள்ள பதிவில்;- சட்டசபையில் அதிமுக-வின் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை குறித்த பிரச்சனையை முடித்து வைக்கும் எண்ணத்தில் சபாநாயகர் இல்லை. காரணம் அவர் இரு தலைவர்கள் படும்பாட்டை ரசித்து கொண்டு இருக்கிறார். அவர் பேசும்போது இவரும், இவர் பேசும் போது அவரும் காட்டும் முகபாவனைகளைப் பார்த்து தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். காரணம் அதிமுகவின் நிலை சட்டசபையில் பரிதாபமாகத் தோன்றுகிறது.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்ந்துவிட்டு, திடீரென ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும்போது ஒருவரை ஒருவர் பார்ப்பது எவ்வளவு கஷ்டம். குடும்பத்தினரோ இவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள். இருவரும் பிடிவாதமாக இருக்கலாம் அல்லது ஒருவர் பிடிவாதமாக இருக்கலாம்; பிரிவதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். யோசிப்பதற்கு, நீதிபதியோ மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார். அப்படிதான் சபாநாயகரும் வாய்ப்பு கொடுக்கிறாரோ..!

நீங்கள் இணைய வேண்டும் என்று இன்றும் கீழ்மட்டத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். அப்படி உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் இருவரும் சட்டசபையின் இருக்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுங்கள். உங்கள் இருவரையும் இப்படி பார்ப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் கம்பீரத்தை சட்டசபையில் பார்த்து வியந்த கண்கள் தானாகவே இன்று கண்களை மூடிக்கொள்கின்றன என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications