சூப்பர் திட்டம்னு நெனச்சோமே.. பேராபத்தா? பதைபதைபூட்டும் பிளாஸ்டிக் சாலைகள் -பூவுலகின் நண்பர்கள் பகீர்
சென்னை: தரமான சாலைகளுக்கும், பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கும் தீர்வாக பார்க்கப்படும் பிளாஸ்டிக் சாலை திட்டத்தை பலரும் வியந்து கொண்டாடி வரும் அதனால் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அந்த அமைப்பு, "தமிழரின் மகத்தான கண்டுபிடிப்பு என்று ஊதிப் பெருக்கப்பட்ட மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழிக் குப்பைகளை பயன்படுத்தி சாலைகள் அமைப்பது என்றால் மிகையாகாது. நிலத்தில் தூக்கி வீசப்படும் நெகிழியானது என்ன சீர்கேடுகளை உருவாக்குமோ அதைவிட மோசமான சூழல் சீர்கேட்டை நெகிழிச் சாலைகள் உருவாக்குகின்றன.

பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் ஒரு முகக்கவசம் கூட இல்லாமல் நெகிழிக் குப்பைகளை சாலைகளில் பயன்படுத்துவதற்காக நறுக்கிப் பொடியாக்கும் (shredder) எந்திரங்களில் பணிபுரிவதைப் பார்க்கவே மனது பதை பதைக்கிறது.
நச்சுப் பொருளான நெகிழியை, எளிதில் சூழலையும் உயிர்களையும் பாதிக்கும் நுண்ணெகிழியாக மாற்றுவதும், அதை சூடாக்கி இளக்குவதும், சூழலில் கலக்குமாறு சாலைகள் அமைப்பதும் எவ்விதத்தில் தீர்வாக இருக்க முடியும்? நெகிழி மாசை மேலும் தீவிரமாக்கும் நெகிழிச் சாலையானது ஒரு போலித்தீர்வு! அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்!" என்று குறிப்பிட்டு உள்ளது.
அத்துடன் இந்த பிளாஸ்டிக் சாலைகளால் ஏற்படும் 5 பாதிப்புகளையும் அந்த அமைப்பு பட்டியலிட்டு இருக்கிறது. அப்படி என்ன பாதிப்பு என்று பார்ப்போம்.
1. நெகிழிச் சாலைகள் அமைக்க நெகிழியைச் சூடாக்கும் போதும், சாலையானது வெயிலில் சூடாகும் போதும் அது நச்சு வாயுக்களை வெளிப்படுத்துகிறது.
2. சாலைல் இருக்கும் நுண்ணெகிழித் துகள்கள் வெயிலிலும் மழையிலும் சிதைந்து சூழலில், குறிப்பாக மழைநீரோடு நிலத்தடி நீரில் கலக்கின்றன.
3. நெகிழிச் சாலைகள் அமைக்க நெகிழிக் குப்பைகள் தொடர்ந்து தேவைப்படுகின்றன. ஆகவே, அவை நெகிழி உற்பத்தியைக் குறைப்பதில்லை.
4. மறு சுழற்சி போன்ற சற்று மேம்பட்ட தீர்வுகளை செயல்படுத்துவதை நெகிழிச் சாலைகள் தடுக்கின்றன.
5. நெகிழிச் சாலைகள் அமைக்க அதிக நெகிழி தேவைப்படுவதால் இவை எவ்விதத்திலும் நெகிழி உற்பத்தியைத் தடுக்க உதவுவதில்லை.












Click it and Unblock the Notifications