“யானைப் பசிக்கு சோளப்பொறி.. ரொம்ப ஏமாற்றம்”.. பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து அறிவிப்பு இல்லாதது, GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என மத்திய பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
2025- 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவர்களை உருவாக்க ஏற்பாடு மாநிலங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வட்டியில்லா 1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையம் அமைக்கப்படும், நகரங்களை வளர்ச்சி மையமாக்க 1 லட்சம் கோடி ஒதுக்கீடு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு இல்லாதது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகளை தீர்க்க பட்ஜெட்டில் நல்ல திட்டங்கள் இல்லை என விமர்சிக்கப்படுகிறது.
பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். "யானைப் பசிக்கு சோளைப்பொறி " என இந்த பட்ஜெட்டை பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை,. மேலும் விலைவாசி உயர்வு குறைப்பதைப் பற்றிய அறிவிப்பும் இல்லை, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி (TOLLGATE) ரத்து அறிவிப்பு இல்லை. இந்தியாவின் பழமை வாய்ந்த தமிழ் மொழியை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கவில்லை.
மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில சாலைகளாக இருந்தாலும் சரி, மாநிலங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் உலகத் தரத்திற்கு இணையாக அறிவிக்காதது ஏமாற்றம்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. மேலும் அசாமில் யூரியா தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தது போல, தமிழ்நாட்டிலும் யூரியா மற்றும் மற்ற தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை உருவாக்க அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்தியா முழுவதும் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கப்படுத்துவது, சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூபாய் 20 கோடியாக அதிகரிக்கப்பட்டது, மேலும் மாநிலங்களுடன் இணைந்து நூறு மாவட்டங்களில் ரூபாய் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவித்தது, கிராமங்களில் இருந்து பணிக்காக இடம் பெயருவதை தடுக்க திட்டம். பொம்மை தயாரிப்பு, துவரை, உளுந்து, பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்து, தானிய உற்பத்தியில் இந்தியா பத்து ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றுள்ளது.
வேளான் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் வகுப்பது, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு ஐந்து லட்சம் பேருக்கு இரண்டு கோடி கடன் வழங்கப்படும் என்பது, எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்துவது, நாடு முழுவதும் 23 ஐஐடிகள் மேம்படுத்துதல், இந்திய மொழிப் பாடங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்பது, குழந்தைகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, மருத்துவ கல்லூரியில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் இடங்கள் அடுத்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்பது நல்ல முன்னெடுப்பு.
அதே மாதிரி மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்பது போன்ற திட்டங்கள் வரவேற்கப்படுகிறது. ஆனாலும் இந்த பட்ஜெட் 'யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications