மார்பளவு தேங்கியுள்ள மழை நீர்.. அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க முடியவில்லை.. பொதுமக்கள் குமுறல்
சென்னை: போரூர் அருகே குடியிருப்பு பகுதியைச் சுற்றி மழைநீர் மார்பளவு தேங்கி உள்ளதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்களை மீட்கச் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதேநேரம் சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள சூழலும் ஏற்பட்டுள்ளது.

கனமழை
வடதமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் கடந்த சில வாரங்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக் கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைக் கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்தது.

தலைநகர் சென்னை
இப்படித் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இந்த நவம்பர் மாதம் மட்டும் 1000 மி.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். இடையில் விட்டிருந்த மழை கடந்த சில நாட்களாக மீண்டும் தொடங்கியதால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதி
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பரணிபுத்தூர் ஜானகிராம் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேல் மழைநீர் இப்பகுதியைச் சுற்றிலும் மார்பளவு தேங்கி உள்ளதால் வெளியே வர முடியாமல் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மக்கள் கோரிக்கை
இப்பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத ஒரு அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை அதிகாரிகள் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதிகாரிகளிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டால் உரியப் பதில் அளிக்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே தண்ணீரை அகற்றுவதற்கு முன்பு இப்பகுதியில் உள்ள மக்களை மீட்கச் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் அதே சிக்கல்
நகரில் வேறு சில பகுதிகளிலும் கூட மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அலுவலகங்கள் செல்வோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கூட மீண்டும் சில மணி நேரம் மழை பெய்தாலே நகரில் வெள்ள நீர் தேங்கும் சூழந்துவிடும் சூழலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே மீண்டும் இப்படியொரு நிலை ஏற்படாமல் இருக்கச் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications