சென்னை கோயம்பேடு - ஆவடி வரை மெட்ரோ ரயில்.. என்னாது முகப்பேர் வழியாகவா?.. அதிகாரிகள் சொல்வது என்ன?
சென்னை: சென்னை கோயம்பேடு- ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பித்ததாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேட்டிலிருந்து சென்னை புறநகர் பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2ஆவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுச்சேரி வரையிலான 3ஆவது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது போல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தை புதிய விமான நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் பரந்தூர் வரை நீட்டிக்கவும் மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5ஆவது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்துவிட்டதாகவும் அதை தமிழக அரசிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில் சென்னை புறநகர் பகுதிகளான சிறுச்சேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு - ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கவுள்ளோம்.
இதற்காக பூந்தமல்லி- பரந்தூர் செல்ல 50 கி.மீ., கோயம்பேடு- ஆவடிக்கு திருமங்கலம் முகப்பேர் வழியாக செல்ல 17 கி.மீ. சிறுச்சேரி- கிளாம்பாக்கம் செல்ல 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த 2 வாரங்களுக்குள் தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications