80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு - திமுக வழக்கு ஜன. 7க்கு ஒத்திவைப்பு
விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டது
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்துக்கு எதிரான திமுகவின் வழக்கு ஜனவரி 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பு படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றிவரும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதனால் அந்த முறையை திரும்பப்பெற வேண்டும் என டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதேசமயம் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு என தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் திமுக மனு மீது தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
4 பேர் படங்களை தவிர வேறு யார் படமும் திமுக சுவரொட்டிகளில் இடம் பெறக் கூடாது -ஸ்டாலின் கடிதம்
அந்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில், தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது இந்த விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கு ஜனவரி 7ஆம் தேதியன்று தள்ளி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கையும் ஜனவரி 7ஆம் தேதி தள்ளி வைக்க வேண்டும் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதியன்று ஒத்திவைத்தனர்