"காணவில்லை.. காணவில்லை.. வட சென்னை எம்பியை காணவில்லை".. பரபர போஸ்டரால் டென்ஷன்!
வடசென்னை எம்பியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது
சென்னை: "வடசென்னை எம்பியை, கொரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை" என்று பொதுமக்கள் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில்தான் இந்த போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.. கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜெஜெ நகர், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, உள்ளிட்ட இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
"ஓர் முக்கிய அறிவிப்பு" என்ற தலைப்பிட்டு, "வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரையும், ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரையும் கொரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை, காணவில்லை.. இவர்களை அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்...இப்படிக்கு ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வாக்காளர்களும், ஜெ.ஜெ.நகர் வாக்காளர்களும், எழில்நகர் வாக்காளர்களும்" என்று அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சென்னையில் கொரோனா உட்பட புயல், மழை தாக்கி வரும் நிலையில், வடசென்னை தொகுதி எம்பியான கலாநிதி வீராசாமி இதுவரை தொகுதிக்குள் வந்து பொதுமக்களை சந்திக்கவில்லை என்பதையே ஆதங்க போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
ஆனால், இன்று வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த சமயத்தில் அவரை காணவில்லை என்று ஆர்கேநகரில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பைதான் ஏற்படுத்தி வருகிறது.