ஆசியாவிலேயே முதல்முறை.. கொரோனாவிலிருந்து மீண்டவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை.. சென்னையில் சாதனை!
சென்னை: ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு இடையிலும் இந்தியாவில் பல மருத்துவ ரீதியான சாதனைகள், சுவாரசிய நிகழ்வுகள் நடந்து வருகிறது. கேரளாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது தொடங்கி சென்னையில் 97 வயது நபர் கொரோனாவை போராடி வென்றது வரை பல நம்பிக்கை தரும் செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது.
அப்படித்தான் சென்னையில் நடந்த ஆபரேஷன் ஒன்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகர் என்று அழைக்கப்படும் என்று சென்னையில் செய்யப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா நோயாளி
ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்தான் இந்த சாதனையை செய்துள்ளனர். ஹரியானாவின் குர்கான் பகுதியை சேர்ந்த 48 வயது பிஸ்னஸ்மேனுக்கு சென்னையில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

எப்போது கொரோனா வந்தது
இந்த நோயாளிக்கு கடந்த ஜூன் 8ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரின் நுரையீரல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட இவர் சென்னைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள இடம் மாற்றப்பட்டு இருக்கிறார். நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இவரின் உடல்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றது.

எம்ஜிஎம் மருத்துவமனை
சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இவருக்கு எம்ஜிஎம் மருத்துவனைமையில் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து இவர் குணமடைந்துள்ளார். ஆனால் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்பும் கூட, இவரின் நுரையீரல் பாதிப்பு சரியாகவில்லை.

மோசமான நிலா
தொடர்ந்து இவரின் நுரையீரல் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனால் இவருக்கு நுரையீரல் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இவர் கொரோனாவில் விடுபட்ட நிலையில் அவருக்கு அதன்பின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மிக கடினமான சூழ்நிலையில், நோயாளின் உடல் மிக மோசமாக இருந்த போதிலும் கூட அவருக்கு மருத்துவர்கள் துணிச்சலாக, மிகுந்த பாதுகாப்போடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

வெற்றி அடைந்தது
இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது இவரின் இரண்டு நுரையீரலும் சரியாகி இயங்கி வருகிறது. இவருக்கு தற்போது எக்மோ உதவி தேவையில்லை. இவரின் உடல்நிலை சரியாகி வருகிறது. ஆபத்து கட்டத்தை இவர் தாண்டிவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளை சாவு அடைந்த நபர் ஒருவரின் நுரையீரல் இவருக்கு பொருத்தப்பட்டது.
Recommended Video

சாதனை படைத்துள்ளனர்
சென்னையை சேர்ந்த கிளெனேஜேலஸ் குளோபல் மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த நபரின் நுரையீரல் இந்த குர்கான் பிஸ்னஸ்மேனுக்கு மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதை சிறப்பாக செய்து, நோயாளியை காப்பாற்றி எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications