பஸ் ஸ்டிரைக் 19ம் தேதி வரை ஒத்திவைப்பு.. கைவிட்ட தொழிற்சங்கங்கள்.. கோர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், போராட்டத்தை 19ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஜெ.ரவீந்திரன் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
அப்போது தொழில் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டபடி முன்னரே நோட்டீஸ் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், போராட்டம் நடத்த உரிமை இல்லை என நாங்கள் கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் நாங்கள் கூறுகிறோம். பண்டிகை நேரத்தில் இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அவசியமா? என கேள்வி எழுப்பினார். இந்த போராட்டம் மூலம் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என கேட்டனர்.
பின்னர் ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் 2.15 க்கு பதில் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.
உணவு இடைவேளைக்கு பின்னர் நீதிமன்றம் கூடிய நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “அரசு, தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 19ம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் 7000 தொழிலாளர்களா? பொதுமக்களா? என்ற நிலை உள்ளது. அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இன்று அதிகாரிகளை வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் மிரட்டல் விடுப்பதால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அண்ணா தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “கடந்த டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான நோட்டீஸ் அளிக்கப்படும் அரசு கண்டுகொள்ளாமல், புறக்கணித்துள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2014ம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும், ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை” என்று கூறினார்.
அப்போது தலைமை நீதிபதி, “தமிழகத்தின் முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை வருவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஜனவரி 19ம் தேதி வரை ஏன் நிறுத்தி வைக்க கூடாது?” என தொழிற்சங்கங்களுக்கும்? “92 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்காலிகமாக ரூ.2,000 ஏன் வழங்கக் கூடாது?” என்று அரசுக்கும் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அரசும், தொழிற்சங்கங்களும் இதற்கு பதிலளிக்க முன்வரவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதாக நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ஜனவரி 19ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து நாளை பணிக்கு திரும்ப தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பணிக்கு திரும்பும் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications