ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியும்.. விஜய்யுடன் சேராத கட்சிகள்! காரணத்தை விளக்கிய திருமாவளவன்
சென்னை: என்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று சொல்லி பார்த்தும்.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. இதற்கான காரணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் ஆட்சியை அமைப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியின் நிலை
திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையை, மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் முயற்சி. இது வெற்றியடையாது. தமிழக மக்களின் ஆதரவு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது. இதை அவர்கள் எடுத்த சர்வேயில் வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. எனவே, வாய்க்கு வந்தபடி பேசி, திமுக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும், அவதூறு பரப்புகிறார்கள். இது மக்களிடையே எடுபடாது.
இன்றைக்கு திமுகவை எடப்பாடி பழனிசாமி இவ்வளவு எதிர்ப்பதற்கு காரணம், திமுக எதிர்ப்புதான் அதிமுகவின் உயிர்நாடி. எனவே திமுகவை அவர்கள் பாராட்ட மாட்டார்கள். எதிர்த்துதான் பேசுவார்கள். எனவே, அது பொருட்படுத்தக்கூடிய ஒன்று கிடையாது.
விஜய்க்கு நெருக்கடி
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகளை பொறுத்தவரை, என்டிஏ கூட்டணிக்கு வராத கட்சிகளை பாஜக, பல்வேறு யுக்திகளை கையாண்டு மிரட்டி வருகிறது. அப்படி தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய்க்கும் மறைமுகமான அழுத்தத்தையும், அச்சுறுத்தலையும் தருகிறார்கள் என்று, பலரும் யூகித்து சொல்லக்கூடிய செய்தியாகத்தான் இருக்கிறது. அதில் நானும் ஒருவன். விஜய்க்கு பாஜக நெருக்கடியை தருகிறத என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
என்டிஏவில் விஜய்
இந்த நெருக்கடிக்கெல்லாம் ஆளாகி, அவர் என்டிஏ கூட்டணிக்கு சென்றார் எனில், அவரது அரசியல் எதிர்க்காலம் கேள்விக்குறியாகிவிடும். விஜய்யை மட்டுமல்லாது.. அவருக்கு வியூகங்களை வகுத்து தரும் குறிப்பிட்ட சில நபர்களையும், பாஜக விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படியாக விஜய்யை என்டிஏவில் இணைக்க முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.
பொய்யான பிம்பம்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியும்.. விஜய்யுடன் கூட்டணிக்கு அரசியல் கட்சிகள் வரவில்லை எனில்.. அரசியல் களத்தில் அவரது நிலை என்னவாக இருக்கிறது? என்பதை அவர் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவரை சுற்றியிருப்பவர் அவருக்கு ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். யாருடைய தயவு இல்லாமல்.. எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியை கைப்பற்றிவிடுவோம் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications