“மத்திய அதிகாரத்துக்கு திமுக, விசிக, மதிமுக ஆசைப்பட்டால் இந்தியா கூட்டணி என்ன ஆகும்?” திமுக பதிலடி!
சென்னை: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு திமுகவின் காசிமுத்து மாணிக்கம் பதிலடி கொடுத்துள்ளார். "காங்கிரஸ் மாநில அதிகாரத்துக்கு ஆசைப்படும் காலத்தில் மத்திய அதிகாரத்துக்கு திமுக, விசிக, மதிமுக ஆசைப்பட்டால் இந்தியா கூட்டணி என்ன ஆகும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 15 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூரின் பேச்சு சர்ச்சையாக அமைந்திருந்தது. மேலும் கூடுதல் தொகுதிகளோடு, ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று அந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில் மேலிடத்தலைவர்கள் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவசரமாக பெங்களூர் புறப்பட்டு சென்றார். திமுகவை விமர்சித்த விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி "அச்சம் இல்லை அச்சம் இல்லை" என்று பதிவிட்டிருந்தார்.
திமுக - காங்கிரஸ் இடையே சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2014-ல் 38,482 வாக்குகள் பெற்ற மாணிக்கம் தாகூரை 4 லட்சம் வாக்குகள் பெற வைத்து, ஒருமுறைக்கு இருமுறை வெற்றி தேடித் தந்தோம். பாஜகவை தேசம் முழுவதும் வீழ்த்திட காங்கிரஸ் என்கிற பேரியக்கம் தேவை என்பதால் தோழமையுடன் திமுக இணைந்து செயல்படுகிறது. தமிழக நலனுக்காக மட்டும் இல்லாமல் இந்திய நலனுக்காக காங்கிரஸை தொடர்ந்து ஆதரிக்கிறது. திமுக தோற்ற தொகுதிகளை எங்களுக்கே தரலாமே என சிலர் கேட்கலாம்.
கடந்த 2024-ல் காங்கிரஸ் 400 தொகுதியில் போட்டியிட்டு, சுயேச்சையும் சேர்த்து நூறுதானே வந்தது. தோற்ற 300 ஐ இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் விட்டுத்தருமா என நாங்கள் கேட்கவில்லை. மாநில அதிகாரத்துக்கு ஆசைப்படும் காலத்தில் மத்திய அதிகாரத்துக்கு திமுக, விசிக, மதிமுக ஆசைப்பட்டால் இந்தியா கூட்டணி என்ன ஆகும்?" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications