துவாரகா பேசியதன் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்.. பழ நெடுமாறன் பரபரப்பு பேட்டி
சென்னை: பிரபாகரன் மற்றும் அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என்று எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. இப்போது பிரபாகரனின் புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார் என்று பழ நெடுமாறன் கூறினார்.
தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபாகரனின் மகள் துவாரகா என்ற பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் பேசிய பெண் தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

ஆபத்து, நெருக்கடி, சவால்களை கடந்து நான் உங்கள் முன் தோன்றியுள்ளேன். தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தனித்து நின்று போர் புரிய திராணியற்ற அரசு சிங்கள அரசு. தற்போது பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்று சொன்னார்கள் ஆனால் கிடைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஐநாவும் நீதி வழங்கவில்லை.
இதுதான் எமது சுதந்திர போராட்டம் உயிர்ப்புடன் இருக்க காரணம்" என்று பேசியிருந்தார். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும், பிரபாகரன் மகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் அடிபடும்.
இந்த நிலையில், தான் துவராகா என்ற பெயரில் பெண் ஒருவரின் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது ஏஐ வீடியோவாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. வீடியோவின் உண்மைத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், துவாராகா பேசுவதாக கூறி வெளியிடப்பட்ட வீடியோவிற்கு பிறகு பழ. நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரபாகரன் மற்றும் அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என்று எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. இப்போது பிரபாகரனின் புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார். அதன் பொருள் என்ன. அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை" என்றார்.












Click it and Unblock the Notifications