பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் அலுவலகத்துக்கு திண்டுக்கல் பூட்டு... பணியை துறந்த பாதி ஊழியர்கள்
சென்னை: சென்னை அண்ணாநகரில் அமைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் அலுவலகம் கொரோனா எதிரொலியாக கடந்த 3 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளது.
பெரியளவில் ஊதியம் இல்லாத நிலையில், கொரோனா பேரிடரிலும் பணிச்சுமையை கூட்டியதால் ஏற்கனவே பணியில் சேர்ந்த பலர் பல்வேறு காரணங்களை கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி வருகிறார்கள்.
இதனிடையே பிரசாந்த் கிஷோர் கொண்டு வந்த ஒன்றிணைவோம் வா திட்டத்தையும் ஒத்தி வைத்துவிட்டது திமுக தலைமை.
மொத்தம் 300 பொருட்கள்.. அதிரடியாக இறக்குமதி வரி உயர்வு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா
பிரசாந்த் கிஷோர்
அரசியல் வியூகம் வகுப்பதில் தேசிய அளவில் புகழ்பெற்றவர் என வர்ணிக்கப்படும் பிரசாந்த் கிஷோர், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுக்கு பணியாற்றி வருகிறார். திமுகவுக்காக அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்க முறைப்படி ஒப்பந்தமும் செய்து கடந்த பிப்ரவரி மாதம் பணிகளை தொடங்கினார். இதற்காக சென்னை அண்ணாநகர் பகுதியில் அலுவலகம் அமைத்து புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதோடு களப்பணிக்கும், ஆய்வுக்கும் ஆட்கள் தேர்வு நடத்திக் கொண்டிருந்தார்.
பணிகள் முடக்கம்
இதனிடையே திமுகவுக்காக இவர் பணியாற்றத் தொடங்கிய ஒன்றரை மாதத்தில் கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், பிரசாந்த் கிஷோர் டீம் முழுமையாக செயல்பட முடியாமல் முடங்கியது. இதனிடையே கட்சி நிர்வாகிகளோடு மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பேசுவது அவரது சொந்த விருப்பத்தின் பேரில், கட்சியினரை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆனால், தாம் கொடுத்த ஐடியா படியே ஸ்டாலின் காணொலி மூலம் நிர்வாகிகளோடு பேசுகிறார் என்ற பிம்பத்தை ஊடகங்களில் பரப்பினார் பிரசாந்த் கிஷோர்.
நிர்வாகிகள் கொதிப்பு
இதுமட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு அவரவர் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் ஏற்கனவே நிவாரண உதவிகள் செய்து வந்த நிலையில், ஒன்றிணைவோம் வா என புதிதாக பெயரை சூட்டி அதற்கான கிரெடிட்டையும் அள்ளிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர். இதனிடையே பிரசாந்த் கிஷோர் அலுவலகத்தில் இருந்து திமுக நிர்வாகிகளை தொடர்பு கொள்ளும் நபர்கள் யாரிடம் பேசுகிறோம், எப்படி அணுகுவது என்பது தெரியாமல் அதிகார தோரணையில் பேசியது அவர்களை கொதிப்படைய செய்து மு.க.ஸ்டாலின் வரை பஞ்சாயத்து சென்றது.
அலுவலகம் மூடல்
இந்த கொரோனா கொடூரத்திலும் ஒரு சிலரை மட்டும் அவ்வப்போது அலுவலகத்துக்கு வர முடியுமா என பிரசாந்த் கிஷோர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து, இருக்கும் சூழலில் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஆளை விட்டால் போதும் என்கிற அளவுக்கு பதில் வந்திருக்கிறது. இதையடுத்து வீட்டில் இருந்தபடியே பி.கே. டீமில் உள்ள முக்கிய ஊழியர்கள் மட்டும் பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் தயார் செய்வது, அண்ணா அறிவாலயம் அறிக்கை வெளியிட்டு 2 மணி நேரம் கழித்து அதே அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்புவது என்பன உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.