கமலுக்கு கை கொடுக்க களம் இறங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
கமலுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்க்க போவதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: இவங்களா, அவங்களா.. இப்படியா, அப்படியா என்று ஒரு தடுமாற்றம் இருந்த நிலையில் கமலுக்காக களம் இறங்க உள்ளாராம் தேர்தல் உத்தி நிபுணர் பிரஷாந்த் கிஷோர்!
பிரஷாந்த் கிஷோர்.. தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. மக்கள் மன நிலையை கட்சிகளுக்கேற்றார் போல திருப்பும் திறமைசாலி. தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதில் வல்லவர். ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார்.
யாருக்காக வேலை பார்க்கிறோமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார். ஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குழப்பமின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர். இவர் அமைத்து தந்த வியூகம் மூலம் உச்சத்தை தொட்டவர்கள் பிரதமர் மோடி முதல் ஜெகன்மோகன் ரெட்டி வரை பரவி உள்ளனர்.
அதிமுக
சமீபத்தில், தேர்தல் தோல்வியில் நொந்து போய் இருந்த, தமிழக முதல்வர் இவரை நேரில் சந்தித்து நிறைய பேசியதாகவும் 2021-ல் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தம் போடப்பட உள்ளதாகவும் செய்திகள் வந்தன.
சபரீசன்
ஆனால் பிரஷாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் நெருக்கம் உள்ளது என்பதால் இந்த முயற்சி அதிமுகவாலேயே, இன்னும் சொல்லப்போனால் ஓபிஎஸ் மூலமாக முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே கமல்ஹாசன் சென்று பிரஷாந்த்தை சென்று சந்திக்கவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசகர் ஆக போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.
முற்றுப்புள்ளி
எனினும் சில தினங்களுக்கு முன்பு, "நான் நிறைய பேரை சந்தித்து பேசுகிறேன். அதனாலேயே அவர்களுக்காக வியூகங்களை வகுத்து தர போகிறேன் என்று சொல்ல முடியுமா?" என்று பரவி வந்த பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரஷாந்த். ஆனால் தற்போது கமல்ஹாசனுடன் கிஷோர் கை கோர்க்கப் போவது உறுதியாகி விட்டது.
மய்யம் வாக்கு
விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மய்யம் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தது. அதிலும் இளசுகளையே கமல் வெகுவாகவே கவர்ந்திருந்தது தேர்தல் ரிசட்டில் தெரியவந்தது. 4 சதவீத வாக்குகள் கமலுக்கு கிடைத்தது. ஆனால் கிராம சபையை கையில் எடுத்தும், நகரங்களில்தான் கமலுக்கு நிறைய ஓட்டுக்கள் விழுந்தது.
சாதக சூழல்
அதேபோல பெண்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு நல்ல செல்வாக்கு இருந்தும் கூட அது வாக்குகளாக மாறவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி சாதகமான சூழல்கள் பலவற்றை வாக்குகளை மாற்றத் தவறியது மய்யம். இதனால்தான் அக்கட்சிக்கு ஓட்டுக்கள் விழுந்தும் சீட்டுக்கள் கிடைக்கவில்லை. தற்போது கிராமம், நகரம் வாரியாக, எவ்வித பொறுப்பாளர்கள், எத்தனை பொறுப்பாளர்களை நியமிப்பது என்பது குறித்து ஐபேக் டீம் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளதாம். இதைத்தவிர மநீ மய்யத்தை எப்படி வலுப்படுத்துவது, கட்டமைப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது.
சம்மதம்
சில தினங்களுக்கு முன்புகூட, கமலுக்காக பார்ட் டைம் வேலை பார்க்க பிரஷாந்த் தயாராகி விட்டதாகவும் இதற்காக அவருக்கு ரூ.2 கோடி வரை கொடுக்க கமல் சம்மதித்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் கசிந்தது. இப்போது, மநீமய்யத்துடன் பிரசாந்த் கைகோர்ப்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
யார் முதல்வர்?
அதே போல, அதிமுகவுக்காகவும் ஐபேக் டீம் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு தமிழக மக்களின் மனநிலை என்ன, முதல்வர் மீதான பிளஸ், மைனஸ்கள் என்ன, அடுத்த முதல்வராக யார் வரணும் என்று விருப்பம் போன்றவற்றை வைத்து ஒரு சர்வே கூட நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆக மொத்தம் பிரஷாந்த் கிஷோர், அதிமுக, மநீம.. இரு கட்சிகளுக்காகவும் ஒரே நேரத்தில் வேலை பார்ப்பதாக தெரிகிறது.
இணையுமோ?
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இவரால் எப்படி வேலை பார்க்க முடியும்? அப்படியே வேலை பார்த்தாலும் எந்த கட்சியை வெற்றி பெற வைக்க முடியும் என்று தெரியவில்லை. வேண்டுமானால் அதிமுகவுடன் மய்யம் இணைய வாய்ப்பு உள்ளதானால் மட்டுமே இது சாத்தியமாகும் போல உள்ளது. ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ?!!