சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை எங்கே போய் விட்டுருக்கு பாருங்க.. இன்னொரு உயிரும் போச்சு.. மனைவி தற்கொலை
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக் கொலையால் கணவரை இழந்த பெண் துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காதல் திருமணத்தால் இரு உயிர்கள் பறிபோயுள்ளன. சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (26). இவரும் ஜல்லடியன்பேட்டை சாய் கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஷர்மிக்கு அவருடைய பெற்றோர் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரவீனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஷர்மி கேட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் , பிரவீன் குடும்பத்தினரின் ஆதரவுடன் பதிவு திருமணம் செய்து கொண்டு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
தங்கள் பேச்சை மீறி ஜாதி விட்டு ஜாதியில் ஒரு பையனை திருமணம் செய்து கொண்டார்களே என ஷர்மி மீதும் பிரவீன் மீதும் ஷர்மி குடும்பத்தினர் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. அவ்வப்போது ஷர்மியின் அண்ணன் தினேஷும் அவருடைய நண்பர்களும் ஷர்மியிடம் "நீ எப்படி பிரவீன் கூட வாழுறேனு பார்க்கிறோம்" என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஷர்மியின் அண்ணனும் அவருடைய நண்பர்களும் , பிரவீனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி அவருடைய நடவடிக்கைகளை கவனித்த அவர்கள் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு டாஸ்மாக் கடை அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கிச் செல்ல வந்த பிரவீனை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரவீனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்தனர். இதில் தினேஷ், ஸ்டீபன், விஷ்ணு, ஜோதி லிங்கம், ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து பிரவீனின் மனைவி ஷர்மி, கணவரின் சட்டையை அணிந்து கொண்டு தனது கணவரின் சடலத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தனது கணவரை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
கணவரின் இறப்பால் மன உளைச்சலில் இருந்து வந்த ஷர்மி, கடந்த 14ஆம் தேதி அன்று கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட பிரவீன் குடும்பத்தினர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஷர்மிளா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆணவக் கொலையால் இரு உயிர்கள் பறி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷர்மி எழுதிய கடிதத்தை போலீஸார் கண்டெடுத்தனர்.
ஷர்மி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். என் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல! தற்கொலை எண்ணங்கள் எழுந்தால் தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்












Click it and Unblock the Notifications