கர்ப்பிணி பெண்கள் சுயமாகவே அடையாள எண் பதிவு செய்யலாம்.. சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் அடையாள எண் பெறுவது தற்போது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. தாய் கருவுற்றதில் இருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவது வரை இந்த எண்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த அடையாள எண்ணை தாங்களாகவே ஆன்லைனில் பெற முடியும் என்றும், இதனை எப்படி பெறுவது என்பது குறித்தும் சில வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. அனைத்து கர்ப்பிணிகளும், பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான, 'பிக்மி' இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்வபர்களுக்கு ஆர்சிஎச்ஐடி என்ற தாய் சேய் நல அடையாள எண் வழங்கப்படுகிறது.

இந்த பதிவு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராம அல்லது நகர்ப்புற நர்சுகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இது கர்ப்பிணிகளுக்கு கொஞ்சம் சிரமத்தை கொடுப்பதாக அமைந்து இருந்தது. எனவே இந்த நடைமுறையை மாற்றி கர்ப்ப காலத்தை கர்ப்பிணிகள் தாங்களாகவே இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆனாலும், கர்ப்பிணி பெண்கள் நர்சுகள் மூலமே பெரும்பாலும் பதிவு செய்து வருகிறார்கள்.
பலருக்கும் இதுபற்றிய போதிய விவரம் இல்லை. எனவே, கர்ப்பிணி பெண்கள் சுயமாக 'பிக்மி' இணையதளத் தில் எவ்வாறு பதிவு செய்வது என்ற வழிகாட்டுதலை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டு இருப்பதாவது: -
குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் மகப்பேறு நிதியுதவி பெற ஆர்சிஎச்ஐடி அவசியம். எனவே, https://picme3.tn.gov.in யின் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் பதிவிட வேண்டும். கர்ப்பிணியின் ஆதார் எண், பெயர், வயது ஆதார் அட்டையில் எப்படி உள்ளதோ அதேபோல இருக்க வேண்டும். கணவரின் பெயர், வயது, ஆதார் எண், செல்போன் எண், பின்கோடுடன் குடியிருப்பு முழு அட்ரசையும் பதிவிட வேண்டும்.
இதேபோல, மருத்துவ பதிவுக்கு கடைசி மாதவிடாய் தேதி, முந்தைய கர்ப்பம், பிரசவம், குழந்தையின் பாலினம், கருக்கலைப்பு விவரங்கள், ஏற்கனவே உள்ள குழந்தைகளின் எண் ணிக்கை, சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரியின் பெயர், இடம், சிக்கலான கர்ப்பத்திற்கான அறிகுறி விவரம்.
பிரசவம் பார்க்க திட்டமிட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஊர் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். குடியிருப்பு ஆதாரம், மருத்துவரால் கர்ப்பத்தை உறுதி செய்து மருத்துவமனையில் மருத்துவரின் முத்திரையுடன் கையொப்பமிட்ட அறிக்கை ஆகியவை பதிவேற்றம் செய்வதன் மூலம் சுயமாக ஆர்சிஎச்ஐடி-யை பெற்றுக்கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஐடியை பதிவு செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 18 ஆயிரம் கிடைக்கும். பல்வேறு தவணைகளில் மொத்தமாக ரூ.18 ஆயிரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications