பொங்கல் பரிசை புறக்கணித்தது போல.. திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள் - பிரேமலதா ஆவேசம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசை புறக்கணித்தது போல இந்த ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள். திமுக அரசின் மீதான அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ரூ. 2.21 கோடி பேருக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் பண்டிகை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஆயிரம் ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

2025 ஆம் ஆண்டிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் பலரும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் இருந்துள்ளனர். பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.
கடந்த 2020 இல் ஆயிரம் ரூபாய், 2021 இல் 2,500 ரூபாய், 2022 இல் ஆயிரம் ரூபாய், கடந்த 2023 இல் ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026 இல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த
அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications