நல்லா விசாரிச்சுப் போடுங்க.. நான் முயற்சிக்கவே இல்லை.. அதெல்லாம் கிடையாது.. பிரேமலதா பொளேர்!
சென்னை: சசிகலாவை சந்திக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டது. தற்போது தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டணி குறித்து சுதீஷ் ஒன்று பேசுகிறார், விஜய பிரபாகரன், பிரேமலதா என ஆளாளுக்கு ஒரு கருத்தை பேசி வருகிறார்கள்.
234 தொகுதிகள்
அதில் பிரேமலதா கூறுவது, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்றே சில தினங்களாக கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
கேப்டன்
இதுவரை நம்மை வைத்து ஆட்சி அமைத்தவர்கள் எல்லாம் நம்மை மதிக்க மறுக்கிறார்கள். கேப்டன் கை காட்டுபவர்தான் இதுவரை முதல்வராகியுள்ளார்கள். இனியும் கேப்டன் சொல்பவர்தான் முதல்வராக முடியும் என்பதுதான் உண்மை. இதை ஆண்ட கட்சிகள் மறுக்க முடியாது. விரைவில் கேப்டனை தேடி வருவார்கள்.
தமிழில் பிடிக்காத வார்த்தை
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை கூட்டணி. அதிமுக, திமுகவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பிரேமலதா பேசியிருந்தார். அதிமுகவை விமர்சித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பிடிக்காத சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால்தான் முதல்வர் ஆனார் என்றெல்லாம் பேசியிருந்தார்.
முற்றிலும் தவறு
அதிமுக கூட்டணி பேரத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால் சசிகலாவை பாராட்டி அவர் பக்கம் துண்டை போட்டு வைத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் சசிகலாவை சந்தித்த பிரேமலதா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இதுபோன்ற செய்திகளை எங்களிடம் விசாரித்து விட்டு போடுங்கள். இது முற்றிலும் தவறானது. நாங்கள் சசிகலாவை சந்திக்க முயற்சிக்கவே இல்லை என்றார்.